வாழ்வதற்க்காய்
முக்குளிக்க மூழ்கிப்போனேன்...
சரலைக்கற்கள் மட்டுமே
விரலிடுக்கில் சிக்கிக்கொண்டது...
முயன்று... முயன்று... தோற்றுப்போக..
கஞ்சலுடனேயே கரை முட்டினேன்...
கடல்நீரோடு கலந்துபோனது வியர்வையென்று
முட்டிமோதிய எனக்கே வெளிச்சம்...
கைதட்டல் இல்லை...
கைகுலுக்கல் இல்லை....
தட்டிக்கொடுக்கும்கரங்கள்
வேறுவேலையில் சிரத்தையாய் இருந்தது...
அலட்சிய நோக்குதல்கள் அசிங்கமாய்
அவ்வப்போது உடலுரசிச் செல்கிறது...
அவமானம் புதிதில்லைதான்...
ஆனாலும் ஒவ்வொருமுறையும்
வலி தந்துவிட்டுத்தான் செல்கிறது....
நாட்களுக்காய் நானோ....
எனக்காய் நாட்களோ...
காத்திருக்கப்போவதில்லை...
அழுக்காயிருந்தாலும்
நான் என்னுடனேயேதான் இருந்தாகவேண்டும்...
நம்புகின்றேன்... என்னைப்போன்றே
எனக்கான முத்துச்சிற்பியும் எங்கோ...
சரலைகளுக்குள்ளேயோ...
கஞ்சல்களிற்குள்ளேயோ...
எனக்காய் காத்துக்கிடக்கின்றது...
உடலொட்டிய மண் தட்டிக்கொண்டு
இதோ மீண்டும் எழுந்துவிட்டேன்....
என் வியர்வையையும்... கண்ணீரையும் மறைக்க
அதோ கடல் இருக்கின்றது...
எனக்கான கரகோசங்களும்....
வாழ்த்துக்களும் இன்னும் செலவழிக்கப்படாமல்
சேமிப்பில்தான் இருக்கின்றது...!!

No comments:
Post a Comment