Pages

Ganesh

Ganesh

Thursday, February 25, 2010

இசை தேடும் கவிதை


உருகி உருகி வழிந்து

மீண்டும் இருகிப்போகிறேன்...

வானவில்லாய் வளைந்து தேடி

கலைந்துபோகிறேன்...

அழிந்துபோகும்... தெரிந்தும்

கரையில் எழுதிவைக்கிறேன்..

கனவே... உனைக்கானவே

தினம் நான் கனவு காண்கிறேன்....

(உருகி உருகி வழிந்து....)


தேகம் உன்னால் எரியும்

நான் விறகாய் சாகிறேன்...

நீ களவுகொண்டு போக

வெறும் கூடாய் நோகிறேன்...

வெயில் கொதிக்கும்போதும்

நான் பனியில் உறைகிறேன்..

என் தனிமை தவிக்கும் நேரம்

மழையில் கனலாய் வெடிக்கிறேன்…

உயிரை தீண்டி.... உணர்வை கொழுத்தி

ஒழிந்துகொள்கிறாய்..

நான் உடைவேன் என்று தெரிந்தும்

விழியால் மோதிச்செல்கிறாய்...

வரமாய் ஒரு சொல் தருவாய்

நான் வேண்டிநிற்கிறேன்....

சாபமேனும் தந்துசெல்லேன்

என் உயிர் பிழைத்திடுவேன்...

(உருகி உருகி வழிந்து...)


நினைவுச்சுவற்றில் உன் பெயர்

மட்டும் எழுதி வைக்கிறேன்...

உன் சிரிப்பின் இசைக்கு

வரிகள்கோர்த்து பாடிப்பார்க்கிறேன்...

நீபோகும் சாலையில்

நானும் நடந்து சிலிர்த்துப்போகிறேன்..

உன்னை கடக்கும் நொடியில்

நூறுமுறை தினம் செத்துப்பிழைக்கிறேன்...

நரம்பில்புகுந்து... சுயத்தைபிழிந்து...

என்னில் கலகம் செய்கிறாய்...

அடிமை சாசனம் எழுதித்தந்தும்

வம்பாய்... போர்தொடுக்கின்றாய்...

என் காதல் ஒருநாள் உணர்வாய்

என்றே காத்திருக்கின்றேன்...

இல்லை... என்கல்லறைமீதெனிலும்

கண்ணீர்விடு.. நான் மோட்சமடைந்திடுவேன்….

(உருகி உருகி வழிந்து....)

Wednesday, February 24, 2010

இணைத்து இணைவோம்..


நீயும்.. நானும்... ஒன்றல்ல...
இருந்தும் உனக்கும் எனக்குமாய்
அழகிய பொருத்தங்கள் ஏராளம் உண்டு...
இதோ எடுத்துக்கொள்வோம்
என்னிடம் நீயும் உன்னிடம் நானும்...
நட்பின் சிதறல்களை...!
பொருந்தும்போத தெரியும்
நம் நட்பின் இறுக்கமும்
அழகாய் அதன் உருவும்....உண்மையாய் ...!!!

Tuesday, February 16, 2010

இரவுகள் ஒத்திவைக்கப்படுகின்றது….


நிலவின் பூரணமும்...
நட்சத்திரங்களின் சிமிட்டலுமாய்
நிறைந்திருந்தது வானம்...
கறுப்பாய் மதி மறைக்கும் மேகம்
எங்கும் தென்படவில்லை...
ஆதலால் மழையில்லை...
கொடியில் உலரப்போட்ட ஆடைகள்
உலரட்டும்...
எங்கோ ஒரு சில்வண்டுமட்டும்
நிசபத்தத்தில் துளையிட்டுக்கொண்டிருந்தது...
காற்றுக்கும் மரங்களுக்குமாய்
ஏதோ ரகசியம் பேசப்பட்டுக்கொண்டிருந்தது...
ரகசியம் ஏன்... நீங்கள் சத்தமிட்டே பேசுங்கள்
நாங்கள் மனிதப்பிறப்புக்கள்...
எங்களிற்கு உங்களின் மொழி புரியாது...
குருவிகளெல்லாம் தூங்கிவிட்டிருக்கும்
நாளையின் ஆச்சரியங்களுக்காய்
அவை அலட்டுவதில்லை....
வால்வெள்ளியொன்று
தூரத்தே நீண்டுமறைந்தது...
வால்வெள்ளிகண்டால் பூவொன்றை நினைத்துக்கொள்...
பாட்டி சிறு வயதில் சொன்னாள்...
இப்போது சிலாகித்துக்கொண்டேன்...
சுவாரசிய கதைகள் எல்லாம்
அவளுடனேயே விலகிப்போனது...
இப்படியே... இந்நொடியே....
இருட்டினுள் கரைந்துபோனால் என்ன...
நாளை மீண்டும்… கடிகாரத்தினுள்
தொலைந்துபோகவேண்டியிருக்காது….
இந்த இரவு எத்தனை பேரால்
இரசிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்...
எத்தனை இரவுகள் இதுபோல் என்னால்
இரசிக்கப்படாமலேயே தொலைக்கப்பட்டிருக்கும்...
அம்மா அழைக்கிறாள்....
மகன்.. வெளியில பனி விழுது.. உள்ள வா..
நாளைக்கு வேலைக்கும் போகவேணும்...
சுருட்டப்பட்ட இரவுடன்
நாளைக்காய் உறங்கப்போகிறேன்….
மீண்டும் ஓர் மின்சாரமில்லா இரவுவரை
என் இரவுகள் ஒத்திவைக்கப்படுகின்றது....!!!

மூழ்கி முகிழ்வேன்

வாழ்வதற்க்காய்
முக்குளிக்க மூழ்கிப்போனேன்...
சரலைக்கற்கள் மட்டுமே
விரலிடுக்கில் சிக்கிக்கொண்டது...
முயன்று... முயன்று... தோற்றுப்போக..
கஞ்சலுடனேயே கரை முட்டினேன்...
கடல்நீரோடு கலந்துபோனது வியர்வையென்று
முட்டிமோதிய எனக்கே வெளிச்சம்...
கைதட்டல் இல்லை...
கைகுலுக்கல் இல்லை....
தட்டிக்கொடுக்கும்கரங்கள்
வேறுவேலையில் சிரத்தையாய் இருந்தது...
அலட்சிய நோக்குதல்கள் அசிங்கமாய்
அவ்வப்போது உடலுரசிச் செல்கிறது...
அவமானம் புதிதில்லைதான்...
ஆனாலும் ஒவ்வொருமுறையும்
வலி தந்துவிட்டுத்தான் செல்கிறது....
நாட்களுக்காய் நானோ....
எனக்காய் நாட்களோ...
காத்திருக்கப்போவதில்லை...
அழுக்காயிருந்தாலும்
நான் என்னுடனேயேதான் இருந்தாகவேண்டும்...
நம்புகின்றேன்... என்னைப்போன்றே
எனக்கான முத்துச்சிற்பியும் எங்கோ...
சரலைகளுக்குள்ளேயோ...
கஞ்சல்களிற்குள்ளேயோ...
எனக்காய் காத்துக்கிடக்கின்றது...
உடலொட்டிய மண் தட்டிக்கொண்டு
இதோ மீண்டும் எழுந்துவிட்டேன்....
என் வியர்வையையும்... கண்ணீரையும் மறைக்க
அதோ கடல் இருக்கின்றது...
எனக்கான கரகோசங்களும்....
வாழ்த்துக்களும் இன்னும் செலவழிக்கப்படாமல்
சேமிப்பில்தான் இருக்கின்றது...!!

Monday, February 15, 2010

வழிதவறிய மேய்ப்பனின் ஆடுகள் நாங்கள்….


நாங்கள்
கருவிலிருந்தே கசக்கியெறியப்பட்டவர்கள்...
சருகுகளாகவே தளிரானவர்கள்....
கருகிய விதையில் வித்தானவர்கள்...
சிசுவிலேயே சிலுவை ஏறியவர்கள்....
பாவத்திற்காய் பரிசானவர்கள்...
வழிதவறிய மேய்ப்பனின் ஆடுகள்...
தவறரியாமலேயே தள்ளிவைக்கப்படுபவர்கள்....
வேர்களினாலேயே நஞ்சூட்டப்பட்டவர்கள்....
இன்றைய நிலையில்
விஞ்ஞானத்தினாலும் விடுவிக்கமுடியாதவர்கள்....
ஆமாம்…
எயிட்ஸ் என்னும் எமனிடம் தத்துக்கொடுக்கப்பட்டவர்கள்…

நாங்கள்....
அசிங்கங்களல்ல...
தொட்டால் தொற்றும் கிருமிகளல்ல...
கொலையாளி வம்சங்கங்களல்ல...
பட்டால் பற்றிக்கொள்ளும் சாபங்களல்ல...
உணர்வுகளற்ற சதைபிண்டங்களல்ல...

மறுக்காதீர்கள்... நாங்கள்....
சபிக்கப்பட்டதும்...
உருக்குலைந்ததும்...
சிறுகதையானதும்...
இருண்டுபோனதும்...
கந்தலாய்க்கிடப்பதும்...
ஒதுங்கிச்சாவதும்...
உங்களினாலேயே... மறுக்காதீர்கள்...

நாங்கள்....
பெரிதாய் எதுவும் கேட்கவில்லை...
வாழும் வரை வாழவிடக் கேட்கிறோம்...
எங்களிடம்...
புன்னகைப்பதால் புண்ணாய்ப்போகமாட்டீர்கள்...
அருகிருப்பதால்... அழுகிவிடமாட்டீர்கள்...
சுவாசம்பட்டால் சுடுகாடு போய்விடமாட்டீர்கள்...
எங்கள் எச்சில்கூட ஏதும் செய்யாதுங்களை...

மனங்களையும்.... மனிதத்தையும்....
விசாலமாய்த்திறந்துகொள்ளுங்கள்...
அன்பும்... அரவணைப்பும்...
எங்களையும் தாங்கிக்கொள்ளட்டும்...
எல்லோர்க்கும் பொதுவான உலகில்
வாழும் சில நாட்களும்
வாழ்ந்துவிட்டுப்போகிறோமே நாங்களும்....!!!

Friday, February 12, 2010

அவனாய் அவள்….


அன்றும் இருட்டுக்குள் பாதுகாப்பாகவே சுருண்டிருந்தேன்...ஆனாலும் வழமை மீறிய அழுத்தம் மெதுவாய் என் மீது பரவத்தொடங்கிற்று... என் இதயத்தின் துடிப்பும் இலேசாய் அதிகரிக்கின்றது... அதுவரை பவளப்பேழைக்குள் முத்தாய் பத்திரப்படுத்தப்பட்டிருந்த நான் திடீரென கிடைகள் மாறுகின்றேன்... தூரத்தில் மிக மெல்லியதாய் ஒரு அழும் குரல் கேட்கின்றது... எனக்கு கொஞ்சமாய் புரியத்தொடங்குகின்றது...நான் இதுவரை காணாத ஒன்றை காணப்போகின்றேன்...என்னால் உணர்வுகளை வெளிப்படுத்த முடிவதில்லை…. ஆனாலும் அது ஒரு பொருட்டல்ல அப்போது...

அடிக்கடி வந்துபோகும் என் உயிர் நண்பன் அருகே வந்து என் பொத்திய கைகளுக்குள் ஆதரவாய் தன் கரங்களை பொதித்துக்கொண்டே சொன்னான்... உன் பயணம் தொடங்கப்போகிறது... புதிர்களும் ஆச்சரியமுமாய்... கண்ணீரும் கலகலப்புமாய்.. வெற்றிகளும் தோல்விகளுமாய்... அரவணைப்பும் அதிர்ச்சிகளுமாய்…. இன்னும் பலதாய் உன் பயணத்திற்கான வாசல் திறபடப்போகிறது... ஆனாலும் இப்படியாய் உன்னுடன் நான் கூடவர முடியாது என்றான்….. முதன்முதலாய் அதிர்ந்துபோனேன்... கதறவேண்டும்போல் இருந்தாலும் கண்கள் மூடிக்கிடந்தது... எனை நீங்கிப்போகாதே... உனையன்றி நான் தனித்தில்லை... நீ துணையில்லா பயணம் எனக்கு வேண்டாம்... நான் கெஞ்சிக்கொண்டேன்... என் வேண்டுதல்களின் தொடக்கம் அது...!

நண்பனின் இதல்களிடையே புன்னகை பிரசவமாயிற்று... உன் கலக்கம் வீண் என்றவன் சொன்னான் இப்படியாகத்தானே வருதல் கடினம் என்றேன்... இன்னுமொரு அழகிய உருவில் உனக்காக நான் அங்கே காத்துக்கொண்டிருக்கிறேன்... தைரியம் கொள் என்றான்... இன்னுமொரு உருவிலென்றால் எப்படி உனை நான் இனம் கண்டுகொள்வேன் என்றேன்... என் கேள்விகளின் தொடக்கமது…..!

மீண்டும் அதே புன்னகையுடனேயே கூறி நின்றான்... கண்டதும் நீ கண்டுகொள்வாய்... என் உருவ ஒளி அவளில் தெரியும்... உனக்காய் அவள் தன் வாழ்வளிப்பாள்... உன்னை அவள் மடிக்குள் பொக்கிசமாய் பொத்திவைப்பாள்… என்னிலும் அவளே உனக்கு நெருக்கமாவாள்… உன் முதல் வார்த்தையின் அர்த்தம் அவளை அர்த்தப்படுத்தும்...!! அவனின் அழகுப்பதில் கேட்டு ஆர்வம் பொங்க… இந்நொடியே அவளை கண்டிட பொறுமைகலைந்தேன்... இறுதியாய் ஐயம் தீர்க்க கேட்டுக்கொண்டேன்... நண்பா நீ யார்... இத்தனை நாளாய் என் அருகிருந்தாய்... அன்பாய் எப்பொழுதும் எனை அரவணைத்திருந்தாய்... தனிமை கலைத்து மகிழ்ச்சியில் எனை சூழ்ந்திருந்தாய்.. நண்பா என்றே உனை அழைத்திருந்தேன்.. உன் பெயர்தான் என்ன கேட்டுக்கொண்டேன்…! மீண்டும் புன்னகைத்தே பதிலுறைத்தான்... உன் பயணத்தில் என்னை நீ கடவுள் என்பாய்... உன்னருகே நான் இருந்தபோதும் எனைத்தேடி அழைந்து உனை மனிதனென நிருபிப்பாய்... இந்தநேரம் இதுபோதும்... இனி கேள்விகளுக்குள் உனக்கான பதில் முளைக்கும்..

இதோபோராட்டம் தொடங்கிவிட்டிருந்தது... உள்ளிருந்து பெரும்விசைகொண்டு நான் தள்ளப்பட என் தலை பற்றி இருகரங்கள் வெளியிழுக்க நான் புதிய பயணத்திற்காய் குருதியில் தோய்ந்த உயிர்ப்பிண்டமாய் இரு கால் இடுக்கில் வெளிவிழுந்தேன்... இத்தனைநாள் என் பசி கலைத்த கொடியொன்று என் தொப்புளிலிருந்து அறுபட ஒரு உயிர் இரு உயிர்களானது... தாதி என்னை தூக்கிக்காட்டினாள் அவளிடம்…… உன் மகன் பாரென... ஆனால் நான் கண்டுகொண்டேன்…. என் நண்பனின் ஒளி அவளில் தெரிந்தது... சந்தோசமும் அழுகையும் ஒன்றிணைய…… வார்த்தைகள் வசப்படாததால் எனக்குமுடிந்தவரையில் அர்த்தப்படுத்தி கத்தினேன்..... அம்மா (ங்ங்ங்கே...).....!!!!!! தாதி சொல்லிச்சென்றாள்... குழந்தை அழுவது ஆரோக்கியமானது..... அம்மா அவள் அருகே எனை மலர்த்தி….. நெற்றியில் இதல்பதித்து அணைத்துக்கொள்ள…….. நான் உணர்ந்திருந்தேன்... என் நண்பனின் நெருக்கமும்…… உடல் சூடும்…. அன்பும்.... அரவணைப்பும் அப்படியே குறையாது இருந்ததை அவளிடம்.....!!!!!!!!!!!!!!!!

Thursday, February 11, 2010

நாங்கள் காதலித்தோம்...


நாங்கள் காதலித்தோம்...
பள்ளிக்கூடம்... அவள் வகுப்பறை...
கடந்து போவதென்றால்.. இருதயம்
மரதன் ஓடியவனாய் அடித்துக்கொள்ளும்...
எதிர்மாடி வகுப்பறை ஜன்னல்..
அவள் அறியாமல் பார்ப்பதில்
என்ன சுகம் இருந்ததென்று இன்று ஞாபகமில்லை...

நாங்கள் காதலித்தோம்...
இரண்டு சைக்கிளில் நாலுபேராய்
அவளை முந்திச்சென்று.. வித்தைகாட்டி...
ஒன்றாய்மோதி... தெருவில்விழ...
நண்பனின் காற்சட்டை சிப் போடமறந்ததை
அவளின் கேலிச்சிரிப்பால் கண்டு வெட்கிப்போனது
இப்போது நினைக்கையில் சங்கடம்மில்லை....

நாங்கள் காதலித்தோம்...
கோயில் திருவிழா...
அவளை கண்டதும் காதல்வர...
கடைக்கண்பார்வை கிட்டவேண்டி
செய்த பிரயத்தனமெல்லாம் வீணாய்ப்போக...
உற்சவத்தின் இறுதிநாளில்...
உச்ச முயற்சியாய்….
புகைப்படத்தில் அவளை வீழ்தும் சாகசம்
சறுக்கிக்கொண்டதும்...அவள்
சித்தப்பனிடம் நாங்கள் மாட்டிக்கொண்டதும்....
நினைவிலிருந்து முற்றாய் அழிக்கமுடியில்லை...


நாங்கள் காதலித்தோம்...
நண்பன் சொன்னான் காதலிப்பதாய்...
அடுத்தகணமே.. அவள்வீட்டு
தொலைபேசியை அலரச்செய்து
அவள் தாயுடன் அவனை பேசச்செய்து...
மீசை எட்டிப்பார்க்கும் வயதில்
விபரீதம் உணராது.... அவள்
வீடு சென்றோம்... பெண்கேட்க...
அங்கே... நடந்தவை ஒவ்வொன்றும்
இன்றுவரை ஞாபகப்பக்கங்களில் பதிந்து…
நாம் ஒன்றுகூடும் வேளைகளில்… வெடிச்சிரிப்புடன்
தவறாமல் மீட்டப்பட மறப்பதில்லை….

இப்படியாய்த்தான் நாங்களும் காதலித்தோம்...
இங்கே தவறுகள்... சரிகள் என்ற
எல்லைக்கோடுகள் இருப்பதில்லை...
விடலைப்பருவ காதலுக்கு அகராதியில்
இவ்விதமே பொருள் இருக்கும்...

இன்று... சந்தர்ப்பங்கள்... சூல்நிலைகள்...
எங்களிடையே தேச எல்லைகளை கீறிவிட
இந்த சின்ன.. சின்ன.. சேட்டைகளால்
நாங்கள் அவ்வப்போது தோளில் தட்டி
சிரித்து… சிலிர்த்துக்கொள்கிறோம்....
அது உங்களுக்குத்தெரிவதில்லை...
எங்களிற்கு மட்டுமே தெரிகின்றது....

வெண்ணிலவு...


வெண்ணிலவு...
எத்தனை கவிகளால்
எத்தனை கவிகள் பாடப்பட்டாயிற்று..
அழகின் வர்ணனைகள் எல்லாம்
உன்னைச்சுற்றித்தானே வட்டமிடுகின்றன...
மனிதனின் முதல் ரசனை
உன்னிலிருந்தே ஆரம்பித்திருக்கும்...
உலகின் அத்தனை மாற்றங்களினதும்
மொத்த சாட்சியம் நீயாய்த்தானே இருப்பாய்....
எத்தனை இரகசியங்கள்
நீமட்டுமே அறிந்திருப்பாய்...
எத்தனை அழகுகளிற்காய்
நீ உவமை ஆகியிருப்பாய்...
ஆனாலும் அலட்டவில்லை...
நீ.. நீயாகவே இருக்கின்றாய்..
ஆதலால்... புத்தனிற்கு போதிமரம்....
எனக்கு… நீ... வியப்பதற்கில்லை…
அறிவியல் சொல்லும்...
பூமியின் சிதறல் என்றும்...
பசிபிக் ஆழியில் உண்டு
உனது பள்ளம் என்றும்...
காற்றில்லா கோள் என்றும்...
மனிதனின் வாழ்விற்காய்
பொருத்தமற்ற கிரகமென்றும்...
உன்னில்… நடப்பவன் பாய்வானென்றும்...
உன் ஒருபக்கம் மர்மம் என்றும்...
பல நூறு செய்தியெல்லாம்
அறிவியல் கண்டுசொல்லும்...
சொல்லட்டுமே... அதனாலென்ன...
மழலையில்...
அம்மாஇடையில் நானிருக்க…
இரவுப்பொழுதுகளின்…
உணவூட்டும்வேளைகளில்
எம்முற்றத்தில் நின்றபடியே…
உன்னில் ஒருபாட்டி இருப்பதாய் கதைகள் சொல்ல
அழகாய் இரசித்து வியந்தேனே..
இப்போது கூட…
உன்னை காணும் இரவுகளில்..
மாற்றமின்றி தெரிகின்றது
அந்த பாட்டியின் உருவம் அப்படியே பசுமையாய்..

அம்மா...

வரம் ஒன்று தா இறைவா..!
கருவறை முதல் என் கல்லறைவரை
தாயவள் நிழல் வேண்டும் எனக்கு..
என்னாயுள் நீள வேண்டாம்
அவளாயுள்வரை தந்தாள்போதும்..

அம்மா...
என் அன்பை சொல்ல
பலநூறு வார்த்தை தேடித்தோற்றேன்..
அம்மா என்றழைப்பதைவிடவும்
அழகாய் எதுவும் தோன்றவில்லை....!!!


என் பிறந்தநாள் கொண்டாட
இஷ்டமில்லை எனக்கு..
அம்மா....
உனக்கு நான்
வலி தந்த நாளன்றோ அது....!!!!


ஜனனம்முதல் வரவாகும்
உறவுகளின் எண்ணிக்கை…!
மறந்தும்… பிறிந்தும்...
இடைநடுவே தொலைந்தும்...
நிறங்களை மாற்றியும்…
நினைவுகளில் சுமைதந்தும்…
முதல் தினம்போல் இருப்பதில்லை…
அந்திமத்தில் உறவுகளின் உறவு...!

ஆனாலும்... அம்மா...
விதிவலக்காய் உன் அன்பு…
நான் கரு உதிர்ந்த நாள் முதலாய்…
கண்மூடும் நாள்வரையில்….
மாற்றம் இன்றி தொடர்ந்திருக்கும்...!
வரமொன்று தருவான் இறைவன் எனில்....
ஒன்றை மட்டும் வேண்டிநிற்பேன் உண்மையாய்...
நான் கண்திறந்த அன்னைமடியே
நான் கண் மூடும் இடமாய் செய்...!!!!!

வாழ்க்கை...



முன்னொரு நாள்...
கடுந்தவம் செய்ததின் பலனாய்
முனிவன்முன் தோன்றினான்
வரம் தர இறைவன்....!
வேண்டியதை கேள் வரமாய்
இக்கணமே தருவேன் என்றான்...!
தவத்தின் சொந்தக்காரன்
வரமென சாபம் கேட்டான்...!
நான் நினைத்தபடி...
என் விருப்பின்படி....
உலகை மாற்றிடவேண்டும்..
இவ்வரமே என்தேவை...!
திடுக்கிட்டுப்போனான் படைப்பின் மூலவன்..!.
எத்தனை சொல்லியும்
இறங்கவில்லை ...!
கேட்டது வேண்டும் என
தவம் கலைந்தபின்பும்
ஒற்றைக்காலில் நின்றான் முனி..!.
வழிஇன்றி சாபத்தை..
இல்லை... இல்லை...
வரத்தை கொடுத்தே விட்டான்
அனைத்துமறிந்தவன்..!
ஆறு முழு நிலவுகள் அவன்
வாழ்நாளில் கடக்கும் முன்னே... ஒருநாளில்
தனக்கான மரணத்தையும் தன்
விருப்பின்படியேற்று
தற்கொலையில் உயிர் முடித்தான்….
வரம்பெற்ற முனிவன்...!

மேலுலகம்....

இறைவன் வந்தான்…!
முனிவனை ஏறிட்டான்….!
நமட்டுச்சிரிப்புடனே கேட்டுக்கொண்டான்…!
உலகையே தன்னிச்சைபோல்
இயற்றிக்கொண்ட மாமுனிவன்
இடமில்லை அங்கென
இங்குவந்தனையோ...!
உடல்தொலைத்த அக்கணமே
அகங்காரமும் தொலைந்துபோக
மண்டியிட்டான் முனிவன்... !
இரட்ச்சிப்பாய் இறைவா..
வாழ்வின் சூட்சுமம் புரிந்துகொண்டேன்..
நாளையின் புதிரோடு…
தோல்வியில் தடக்கி …
வெற்றியில் எழுந்து…
அழுகையையும்.. சிரிப்பினையும்..
அங்கங்கே பகிர்ந்து..
வாழ்க்கையின் மணித்தியாளங்களை
அணுபவமாய் பயின்று..
கோபத்தையும் அன்பினையும்
உண்மையாய் நுகர்ந்து…
இயற்கையின் ஆச்சரியங்களில்
அதன் இயல்பிலேயே கலந்து..


மொத்தத்தில்..
கடவுளாய் நீயும்….
மனிதனாகவே நானும்...
இல்லாத உலகம்..
உப்பற்ற பண்டம்தானே..
எல்லாமிருந்தும் இல்லாத வாழ்வில்
வெறுத்துப்போனேன்..
அஃதே நான் இன்று உலகம்துறந்தேன்..
மரணம் கொண்டேன்...!!!!

தென்றலுடன் கலந்த பொழுதுகள்…..


கடற்கரை மணல்...
தனிமையில் நிலா...
என்னுடன் நீ மட்டும்...
மொழியில்லை.... ஆனாலும்
ஆயிரம் கதைகள் பேசிக்கொண்டோம்... !
சலனம்தான் உன் அடையாளம்...
உன்னால் என் சலனங்கள அத்தனையும்
தானே கலையும்... !
உனக்கும் எனக்குமான உறவை
மொழியால் இதுவரை
அர்த்தப்படுத்த முடியவில்லை...!
அதனால் என்ன...
உன் ஸ்பரிசங்கள் தூண்டும்
அழகிய உணர்வுகள் ஒவ்வொன்றும்
என்னுள்... விவரனையில் சிறைப்படுத்த இயலா
உணர்வுகளாகவே பதிவாக்குகின்றேன்...!
இயந்திரமாய் ஓடும் மணித்துளிகளில்
உன் கொஞ்சலுடனான நிமிடங்கள் மாத்திரமே
எனக்கான செலவுகளாய் வரவுவைக்கப்படுகின்றன...!
என் காதோர உன்செல்லச்சினுங்கல்கள்
ஆயிரம்... ஹைக்கூக் கவிதைகள்... !
என் உயிர் தொடும் உன் சீண்டல்கள்
பீத்தோவன் ஹார்மோனிய மெல்லிசைகள்...!
என் தலைகோதும் உன் தீண்டல்கள்
நூறு மயிலிறகுத்தோகைச் சாமரங்கள்...!
என் காதுமடல் வருடும் உன் சேட்டை...
“செல்லி”யின் சில்மிச கவிவரிகள்…!
அதனால்தான்...
இறந்துபோன நாட்களில்
இறக்காத பொழுதுகள் எதுவென்றால்...
இமைகள் மூடிக்கொள்ள... சொல்லுவேன்...
கடற்கரை மணல்...
தனிமையில் நிலா...
என்னுடன் 'குளிர்த்தென்றல்'...
மொழியில்லை... ஆனாலும்
ஆயிரம் கதைகள் பேசிக்கொண்டோமே...
அந்த நிமிடங்கள்தான்...
என் இத்தனை வருட நெடிய நாட்களில்
நான் வாழ்ந்த... நிறைந்த... கவிதைப்பொழுதுகள்...!!!!

நிர்வாணம்

கருத்துப்போன பகலுடன்
காத்துக்கிடக்கின்றேன் ...
கீழ்வானம் என் விழிகள்போன்றே
சிவந்துகிடக்க.. வானம்
எனக்குபதிலாய் கண்ணீர் சிந்தியபடி...
காற்று வெப்பமாகவே இருக்கின்றது...
நான் மட்டும் உணர்கிறேனா...
எண்ணப்பலகையில் நீ கிறுக்கிச்சென்ற
கிறுக்கல்கள்மட்டுமே அழியாது இருக்க...
யாரோ இரு உயிர்ப்பிண்டங்கள்
உளரிக்கொண்டு செல்கின்றன
இவன் பைத்தியம்...
பேசமறந்ததால் மொழி மறுத்தேனா...
இல்லை… மொழிமறந்துபோய் பேசமறுத்தேனா...
தெரியவில்லை.... ஆனாலும்...
பேச எதுவுமில்லை என்னிடம்...
எங்கோ இருந்து பறந்துவந்து
என்னில் மோதிச்சென்ற ஓர் சருகு
காதில் ஏதோ சொல்லிச்சென்றது...
எனக்குத்தெரியும்...
என் உயிர் முடிச்சு உன்
எண்ணக்கயிற்றில்தான் முடியுண்டு கிடக்கின்றது... நீ
விட்டுச்சென்ற உன்... சுவாசக்காற்றில்தான்
இந்த உடல் உருக்குலைந்தும் உயிர்வாழ்கிறது...
அடுத்த நிமிடமே என்பிடிமானமெல்லாம்
என்பிடிவிட்டுப்போகலாம்... அக்கணமே
என்விரல்கள் உன் விரல்களுடன் கைகோர்க்கும்...
அதுவரை... நான்...
கருத்துப்போன பகலுடனேயே காத்துக்கிடக்கின்றேன்...
உன்னைத்தொலைத்து நிர்வாணமாய்…!!!

நாம் சபிக்கப்பட்டவர்கள்

பெற்றமண்.. மாற்றானால்
களங்கப்பட்டு.. அபகரிக்கபட
எமக்குள்மட்டும் வீராவேசம் பேசி
வெளியில் மெளணிகளாய் இருதோமே..
நாமெல்லாம் சபிக்கப்பட்டவர்கள்..!

துரோகிகளெள்ளாம்.. துரோகிகள்தாமென
எக்காளமட்டுச் சொலியும்..
நேரில் கண்டால்.. சந்தனப்பொட்டிட்டு..
மலர் மாலை சூடி.. போலியாகவேனும்
சிரித்தபடியே வரவேற்று..
சகதியில் புதைய சம்மதிக்கின்றோமே..
நாமெல்லாம்தான் சபிக்கப்பட்டவர்கள்..!

என் இரத்தத்தின் இரத்தங்களேயென..
அடிக்குரலில் கபடமாய் பேசுபவனையே..
தலைவா..தலைவா..என தலைமேல்தூகியபடியே..
தன்னிலை உணர்வற்ற தொப்புள்கொடி உறவுகளை..
பலமென்று எண்ணி.. நொந்தோமே...
நாமெல்லாம் சபிக்கப்பட்டவர்கள்..!


குந்த ஒரு குடிநலம் கேட்டது
குற்றமென கண்டதனால்..
குரூரமாய் குதறப்பட்டு..
குருதி தோய்ந்து.. உருக்குலைந்து..
குற்றுயிராய் கிடக்கின்றோமே..
நாமெல்லாம்தான் சபிக்கப்பட்டவர்கள்..!

அருகேதான் விடிவெள்ளியென..
நம்பிக்கையுடன் ஓடியவர்களின்..
கால்களெள்ளாம் வெட்டப்பட..
கதியற்று.. கதறுகின்றோமே..
நாமெல்லாம் சபிக்கப்பட்டவர்கள்..!

உலகே….. இன்று..
சபிக்கப்பட்டவர்கள்.. சபிக்கின்றோம்..
நாம் அணு அணுவாய் அறுக்கப்பட
கத்திகொடுத்து.. கைதட்டி நின்றவரே..!
கைகட்டி வேடிக்கை பார்த்தவரே..!
கணகள்மூடி.. உறக்கம்போல் நடித்தவரே..!
உண்மையாய்தானடா சொல்கின்றோம்..
ஒருநாள்..
நாம் சிரிக்கப்போவதும்..
நீங்கள் அழப்போவதும்...
எம் புதைந்துபோன
தலைமுறைமீது.. சத்தியமாக உறுதி!

தனிமை...

தனிமை...
அது ஒரு தவம்...!
அதுவே ஒரு வரம்..!
கவிதைகளின் பிறப்பிடம்...!
கனவுகளின் உறைவிடம்..!
கடந்தகாலத்தை மீள்படிக்க
உதவும் நாற்குறிப்பேடு..!
என்னை நானே உற்றுப்பார்த்திட
வழி செய்யும் கண்ணாடி...!
மெளனத்தின் வழி
பலநூறு கதை சொல்லும் கருவூலம்..!
காதடைக்கும் இரைச்சல்விடுத்து
இதம் சேர்க்கும் தியானபீடம்...!
இது……….
எல்லாம் இருந்தும்…. இளைப்பாற சில பொழுதுகள்
தனிமை சேர்பவன் மனநிலை....!!


தனிமை...
அது ஒரு வலி...!
அதுவே ஒரு சாபம்..!
தவறுகளின் பிறப்பிடம்...!
தண்டனையின் உறைவிடம்..!
பிரிவுத்துயர் சொல்லித்தரும்
கலாசாலை..!
கவலைகளுக்கு தூபமிடும் பலிபீடம்..!
வெறுமையின் வாசிகசாலை..!
பசிப்பவனின் வெற்றுக்கோப்பை..!
வாய் இருந்தும் நாவறுந்ததாய்..
கேள்செவியிருந்தும் செவிடானதாய்...
எண்ணத்தோன்றும் மலட்டுநிலை...!
இது……….
உறவுகள் பிரிந்து
தனிமையின் பிடியில்
கோரமாய் சிக்கிக்கொண்டவன் மனநிலை…!!

இரண்டுமே தனிமைதான்...
இருந்தும்..
இரண்டுமே தனித்தனி...!!!!!

சுனாமி (26 – 12 – 2009)


கடந்தது வெறும் ஐந்தே வருடங்கள்...
ஆயுசுக்கும் மறைய போவதில்லை வடுக்கள்..
கண்களை மூடிக்கொண்டால்
மீண்டும் விழித்திரையில் சுழன்றடிக்கும்
ஆழிப்பேரலை அகோரக்கணங்கள்...
அறைமணிப்பொழுதில்
ஆயிரமாயிரம் கனவுக்கோட்டைகள்
அடியொடு தகர்ந்துபோக...
உறவுகளற்று அம்மணமாய் நின்றோம்...
நூற்றில் இருந்து ஆயிரமாயிரமாக
உடலங்களின் தொகை உயர்வதாய்
செய்திகள் கதறும் கணமெல்லாம்
எஞ்சியவர் இதயங்கள்
சிதறிக்கொண்டே இருந்தன..
ஊரின் ஓரத்தில் சுடுகாடு இருந்தது..
அன்று சுடுகாட்டின் மத்தியில்போய்
ஊர் குந்திக்கொண்டது...
சுனாமியின் அறிமுகம் இப்படியா இருக்கவேண்டும்...
இன்னும் உடைந்துபோன எத்தனையோ உறவுகள்
முறையாய் ஒட்டிக்கொள்ளவில்லை...
சிலரிற்கு நாட்காட்டி அன்றையபொழுதின்பின்
புறட்டப்படவேயில்லை...
சோகங்களை முழுதாய் சொல்லப்போனால்
வார்த்தைகளும் நொண்டியடிக்கும்..
அவற்றிற்கு அத்தனை வலிமையில்லை...!
ஆகாயம் தாண்டிப்பறந்தாலும்..
புதிய கிரகம்கண்டுநுழைந்தாலும்...
இன்றுவரை மனிதன் இயற்கைமுன்பூஜ்ஜியம்தான்...
கனவுகளுடன் கரைந்துபோனவர்களே..
உங்களின் வெற்றிடங்கள் எங்கள் மத்தியில்
நிரப்பப்படாமலேயே இருக்கும்...
அவை உம்மை ஞாபகப்படுத்தியபடியே இருக்கும்
இவ்வுலகில் எப்போதும்....!!!

காதலாகிக் கசிந்து…


இதயம் திறந்து வை..
கனவுகளுடன்
காதலும் உள்ளே வரட்டும்...
அது...
கனக்கின்ற மனதிற்கு இறக்கைதந்து…
பனித்துளிக்குள் சிறிதாய்… அழகாய் வீடுதந்து...
மகரந்த தாள்களில் உனக்காய்… புதிதாய் படுக்கை செய்து...
உயிர்க்கூட்டில் பட்டாம்பூச்சிகள் பறக்கச்செய்து…
நினைவுகளின் குப்பையெல்லாம் சுத்தம் செய்து...
இதலெல்லாம் புன்னகைக்குள் ஊறவைத்து...
தனிமையிலும் தனிமைக்கு விடுப்பு தந்து…
வானுக்கும் உனக்குமாய் பாதை நெய்து...
பகலிலும் நிலவோடு உறவுதந்து…
மூச்சுக்காற்றில் குளிர்தூவி சிலிர்க்கவைத்து...
நொடிதோறும் மென்சாரலில் நனையவைத்து…
ஒற்றைச்சொல்லில் கவிதை சொல்ல கற்றுத்தந்து…
தினமும் புதிதாய் உன்னை பிறக்கவைத்து...
அடடா...... சொல்லித்தெரியாது காதல்...
கலந்துபார்....
தேன் சுரையில் புகுந்துகொண்ட எறும்பாவாய்..
ஆதலினால் நீயும் மெய்யாய்...
காதலாகிக் கசிந்து பார்.....!!!

காட்சிப்பிழை


விழித்திரையில் சாதாரண விம்பமாய்
தலைகீழாய்த்தானே நீயும் விழுந்தாய்...
ஆனால் விழுந்த நொடியே.. என்னை
தலைகீழாய் ஏனடி புரட்டிப்போட்டாய்...
நாடி பிடித்துப்பார்த்தேன்
உனக்குமாய் சேர்த்து என் இதயம் துடிக்கிறது...
சற்றே திரும்பிப்பார்த்தேன்
என் பின்னே இரண்டு நிழல்தொடர்கிறது...
என் கடிகார முட்கள் கட்டின்றி
உன்னைநோக்கியே ஓடுகின்றதடி...
என் சுயமும்... சுற்றமும்... உன்னால் இங்கே
தொடர்பறுந்து கிடக்குதடி...
வண்ணத்துப்பூச்சி இறக்கை ஓவியமாய்
வரைந்தவன் தெரியாமலேயே
உன்படம் மனதில் ஒட்டிக்கொண்டது...
விழி தொடும் தொலைவில்
நீ இல்லா பொழுதுகளிலும்.. என்
கைகளில் உன் வெப்பம்
மெதுவாய் மோதிக்கொண்டது...
மெல்லிய காற்று
என் உடல் வருடும்போதெல்லாம்
காரிகை உன் இமைச்சாமரங்கள்… எங்கோ
அழகாய் படபடப்பதாய்
உணர்கிறேன் நான்...
உடலினில் உயிர் இருக்குமிடம்போல
உன்னை எனக்குள்ளே
ஒழித்துக்கொள்ள தவிக்கிறேன் நான்...
இப்படியாய்... இதற்கும்மேலாய்...
வழமை தாண்டிய காட்சிப்பிழைகள் என்னில் ...
உன் வாய்மொழி வார்த்தையில்
பிழத்துக்கொள்ளும் என் ஜீவன் மண்ணில்...

பார்க்காதே


கன்னியே....
உன் கண்களில் என்ன
கண்ணியா புதைத்தாய்..
அதில் விழுந்தெழும் கணமெல்லாம்
சிதறுகின்றேனடி நான்.....!!!!

காதல்...நீ அதிசயம்


எத்தனை பேர் உன்னில்
விழுந்து தொலைந்தாலும்..
அதப்பெடி... நீ மட்டும்
களங்கப்படாதிருக்கின்றாய்.....!!!!!!!

அன்பே.......


உன் ஒரு கணப்பார்வையில்
துண்டாகித்துகள்களாகிப்போன என்நெஞ்சம்..
உன் மறுகணப்பார்வையில்தானடி
ஒன்றாகி.. உன்மேல் காதல் வந்தது..!!

காதல்...

கற்களின் மோதல் இல்லை..
தீக்குச்சி...தீப்பெட்டி... இரண்டும் இல்லை..
இரு சடப்பொருட்களின் உராய்கையும் இல்லை..
இலத்திரன் பாய்ச்சலுக்கான சாத்தியங்களும் இல்லை..
அட........ ஆனாலும் பற்றிக்கொள்கிறது..
நான்கு கண்களின் சந்திப்பில் திடீரென..
அழகாய் காதல்...!!!!!!!!

மீண்டும் உன்னைதேடி..


கண்களின் இடுக்கினில்
கற்துகள் உறுத்தியபோதும்...
கனவுகாண கற்றுத்தந்தவள்..நீ..
விரல்கள் உடைந்து
ஊனமாய் போனபின்பும்
கவிதை எழுதும் விந்தைசெய்தவள்..நீ..
நாவிழந்து.. வார்த்தை
செத்துப்போனபின்பும்..
பாடல் பாட சொல்லித்தந்தவள்..நீ..
கந்தகத்துகள்களால் அடைபட்டுப்போன
நாசித்துவாரம் வழி..
சுகந்தமுணரும் உணர்வுதந்தவள்..நீ..
மொத்தத்தில் நான்
நடைபிணமாய கிடந்தேனே..
உயிர்தந்து.. உயிர்ப்பித்தவள்..நீதானே...
பெண்ணே.. உன் வழிச்சுவடே
என் வாழ்கைபாதையென..
உன் அடியொற்ற நினைக்கையிலே..
வானவில் வந்து சென்ற வானமதாய்
வெறுமை தந்து சென்றாய் ஏனோ..
உயிரே.. நீயாகிப்போன என்னை
எங்கும் தேடி தோற்றதனால்..
வேண்டிக்கொண்டேன் இன்று..
மீண்டும் என் கண்களின் இடுக்கினில்
கற்துகள்கள் உறுத்தட்டும்.............!!!!

ஓட்டை பானை (26-01-2010)

முடிந்து போயிற்று...
காதை கிழித்த பிரச்சார பீரங்கிகள் சத்தம்...
சாலைமூடிய தொண்டர் மந்தைகள் கூட்டம்...
ஊரை குப்பைகளாக்கிய புழுகுத்தாள்களின் கஞ்சல்...
பொய்மையை வாய்மையாய்கொண்ட
தொ(ல்)லை காட்சிகளின் ஓலங்கள்...
இன்றுடன் சற்றே ஓய்ந்துபோயிற்று...
தலைசிறந்த…
பொய்யர்களிற்கான...
கள்ளர்களிற்கான...
நாசக்காரர்களிற்கான...
கொலைகாரர்களிற்கான...
ஈனப்பிறவிகளிற்கான...
தேர்ந்தெடுப்பு முடிந்துபோயிற்று....
பத்தம்ச... பதினைந்தம்ச.. வாக்குறுதிகள்
காற்றோடு பறந்துபோவது... அதோ தெரிகின்றது...
எமக்கான ஆப்பை... நாங்களே வைத்தாயிற்று...
முகத்தில் பூசப்போகும் கரிக்கு... முதல்படியாய்
விரல்நுனியில் கறு மை படிந்தாயிற்று...
ஜனநாயக தேர்தலெனும் கேலிக்கூத்தில்
நாங்களும் பங்கிற்கு நடித்தாயிற்று...
இனி... உலகத்தின் முதல்நாடாய் இந்நாடும்..
உலகத்தின் உயர் குடியாய் இம்மக்களும்..
சுதந்திரத்தின் குடியிடமாய் இம்மண்ணும்...
மாறிவிடும்... நம்புகின்றோம்..
ஏனென்றால் நாமெல்ல்லாம் மடையர்தானே...
வேட்டிதருவதாய் சொன்னார்கள்...
எமக்கு தெரியும்... கட்டியிருக்கும் கோவணமும்
இனி...கண்முன்னே களவாடப்படுமென்று...
பிணத்தின் நகையையும் களவாடும் எங்கள்
ஜனநாயகம் பேசும் அரசியல் பதர்களே..
திருந்தாத கூட்டங்கள் நீங்களெனினும்
போகிற போக்கில் சொல்லிவிட்டுப்போகிறேன்...
போங்கடா நீங்களும் உங்கட அரசியலும்…!!!!

ஏதோ ஒன்று…….


முன்புபோல் இல்லை நான்...
எனக்குமட்டுமே புரிகின்றது....
கோபங்கள் என்னுடன் நேசங்கொள்ளவில்லை...
இரவுநேர கடிகார முள் ஓசை கேட்பதில்லை...
அனைத்துமே அழகாய் இருக்கின்றது...
அழகாய்இருப்பவையெல்லாம்
எதையோ அர்த்தப்படுத்துகின்றது....
அடிக்கடி திரும்பிபார்த்துக்கொள்கிறேன்...
அதிசயமாய் புன்னகைத்தும்கொள்கிறேன்...

முன்புபோல் இல்லை நான்...
வெற்றுத்தாள் கண்டால்.... சட்டைப்பையில்
பேனாவின் இருப்பை உறுதிசெய்துகொள்கிறேன்...
யாரும் இல்லா தனிமையில்... மெல்லதாய்
ஒரு பாடலை முணுமுணுத்துக்கொள்கிறேன்...
வார்த்தைகளுக்கான நேரத்தை
மிச்சப்படுத்தவும்...
மெளனங்களுக்காய் நேரத்தை
செலவழிக்கவும் பழகிக்கொண்டேன்...

முன்புபோல் இல்லை நான்...
என் படுக்கை அறை சுத்தமாய் இருக்கிறது....
புத்தக அலுமாறியை
கவிதைப்புத்தகங்கள் ஆக்கரமிக்கின்றது....
முற்றத்துப்புல்லை முத்தமிடும்
காலைப்பனி இரசிக்கவே
கனவுகளை உதறிவிட்டு
சோம்பல்முறிக்கும் விந்தை கொண்டேன்...
என் வீட்டு
கொய்யா மரத்தில் நின்று கத்தும்
காகத்தை துரத்திடவும்
ஏற்கவில்லை மனம்.... கண்டேன்...

முன்புபோல் இல்லை நான்...
எனக்குமட்டுமே புரிகின்றது....

பொருத்தமற்றவன்….

என்னை மன்னித்துவிடு..
நீ சொல்வது உண்மைதான்..
எனக்கு உனக்காய்
கவிதை சொல்லத்தெரியாது..
உன்னை தூங்கவைக்கும்
இசை அறிவும்கிடையாது..
நீ தூக்கிபோடும் எச்சங்களை
சேகரிக்கும் ஆசைகிடையாது..
உன் அசைவுகளை வர்ணிக்கும்
கலைஞானமும்கிடையாது..
என் கடிகார முட்கள் இரண்டும்
உன்னைசுற்றியே ஒடுவதாய்
பொய்சொல்லத்தெரியாது...
என் உடற்செல்கள் ஒவ்வொன்றும்
உன்பெயரையே பச்சைகுத்திக்கொண்டதாய்
பிதற்றவும் தெரியாது...
காதலர் தினத்தன்று
பூங்கொத்துடன் உன்முன்வந்து
உன்னை அசறவைக்கத்தெரியாது...
உன் இரவுகளின் பாதிநேரத்தை
கைப்பேசியின்வழி அபகரிக்கும்
சுவாரசியமும் தெரியாது...
ஆகமொத்தத்தில்
நீ விரும்பும் காதலனாய் நானில்லை…. கண்டுகொண்டேன்…
மன்னித்துவிடு என்னை..
வேசம் போடத்தெரியாதவன் நான்..
காதலை கூவிவிற்கும்
வியாபாரியும் இல்லை நான்…
இன்றுபோலவே என்றுமிருக்கும்
உண்மை காதலன் இவனென்பதால்...
ஒத்துக்கொள்வேன் வெட்கமின்றி...
ஏமாற்றும் தகுதிகள் குறைந்தவன்……….- நீ
காதலிக்கப்பொருத்தமற்றவன்தானடி…..!!!

நனைந்தவன்.....

ஒருமுறையேனும் வரமாட்டாயா.....
மனம் ஏங்கிக்கொள்ளும் உன் வரவுக்காய்....!
காக்கவைத்தே பழக்கமுனக்கு
வருவதில்லை நீ ….
நான் ஏமாந்து போனதே அதிகம்.... !
நீ வருவாய்….
நான் அலுத்துக்கொள்வேன்….!
ஐயோ.. ஒரே தொல்லை…
அலுவலகம் செல்ல...
நண்பர்களுடன் கும்மாளமிட…
கடற்கரை அழகு ரசிக்க...
நினைத்த இடம் சென்றுவர...
ஒரு ஐஸ்கிரீம் சுவைக்க…
இது எதுவும்முடிவதில்லை உன்னால் எனக்கு...! எப்பொழுதுதான்போவாயோ…
சீச்சீ... என்றாலும் விடுவதாயில்லை நீ...!
ஒன்று தெரியுமா உனக்கு
சித்திரை மாதத்தில் நீ வரும் ஒருநாளும்...
மார்கழியில் நீ இல்லா அந்நாளும் ….
அழகு….
மழையே………!!!!!

தளர்வதில்லை நாம்....

எத்தனை ஆயிரம் வலிகள் சுமந்தோம்..
உறவுகள் சிதைய உருக்குலைந்தோம்..!
கனவுகளெல்லாம் கானலாய்ப்போக..
கண்ணீர் விடவும்.. அருகதையற்றோம்..!
ஆண்டசாதி அகதியாய்போக..
அயல்வீடு தேடி.. யாசகரானோம்..!
முல்லைகளெள்ளாம் முடமாய்ப்போக..
முட்கம்பி வேலிக்குள்..மிருகங்களானோம்..!
கடவுள்கள் எத்தனையோ எமக்கிருந்தும்..
கடைசியில் கருவறையிலேயே கரியாய்போனோம்..!
கல்லிலிருந்த தெய்வங்களெல்லாம்..
வெறும் கல்லாய் இருக்கவே நாம் கதியற்றுப்போனோம்..!
குறைகள் இல்லை எமக்கென்ற
அறிக்கைகள்கண்டு சிரித்துக்கொண்டோம்..
இழப்பதற்கென்று இனி
எதுவுமில்லையென்றானபின்பு..
குறைகளெங்கே எமக்கிருக்கும்..!
கண்விழிகளெல்லாம் களவாடபட்டபின்பு
கனவுகளெங்கே கருத்தறிக்கும்..!
இன்றுதான் நாமெல்லாம் சிரிப்பதாக
பத்திரிகை புகைபடங்கள் சேதிசொல்லும்..
நெஞ்சினிலே கனல்கின்ற பெருந்தீயை..
எந்த படகருவி காட்டிநிற்கும்..!
இத்தனையானபின்பும் நம்பிக்கைகொண்டு...
உலகுக்கோர் தலைநமிர்த்தி உண்மைசொல்வோம்......!
ஈழத்தமிழர் நாம் பீனிக்ஷ் பறவையினம்...
எம் உறவுகள் சாம்பலில் இருந்து எழுந்துவந்தோம்..
மீண்டும்.. அந்த சூரியன் நோக்கியே பயணிப்போம்.....!!!

உனக்கானது இது....

உன் அழகை
கவிதையில் சமைத்து
காதலுடன் சேர்த்தேன்
உன் கரம்...
என்னை அவமதிப்பதாய்..
குப்பையென கசக்கி
வீதியில் வீசினாய் அதை...
அடி மூடப்பெண்ணே….
எழுதியவன் நானெனினும்
அதில் எழுதப்பட்டவள்
நீயன்றோ....!
காயங்களுடன் நான்
வீடு வந்துசேர்ந்துவிட்டேன்..
இன்னும் நீயோ
கசங்கியபடியே வீதியில்கிடக்கின்றாய்...!
ஓடிச்சென்று அதை
பத்திரப்படுத்திக்கொள்ளடி...
பின்னொருநாள் …
உன் பார்வையில்…
உன் வீட்டு
நிலைக்கண்ணாடியைவிடவும்
அது உன்னை
அழகாய் காட்டக்கூடும்....!!!

உளறல்கள்............


ஒவ்வொரு மனித முகம்போன்றே
ஒவ்வொரு காதலும் வேறு வேறாய்...

பிறக்கும் குழந்தையின்
பொத்திய கைகளுக்குள்
ஒழிந்துகொண்டே பிறக்கிறது…..காதலும்….

காதல் என்பது
வரமாகவோ..இல்லை சாபமாகவோ...
நிச்சயமாய் ஒவ்வொருவனிற்கும் உண்டு...

உடலில் எங்கே இருக்கின்றதென
தெரியாவிடினும்....எங்கோ இருந்து
அழகாய் சித்திரவதை செய்யும்
காதல்..........

பகிரவோ.. பெறவோ முடியாது..
உணர்வதால் மட்டுமே வசமாகும்...
இந்த காதல்...

தோற்றாலும் தோற்காத..
அதிசயமாய்... காதல்..

வென்றவனையும் அடிமையாக்கும்
மதுதானடா.. இந்த காதல்…!!

இது எனக்கு மட்டும்......!


அழகிய ஹைக்கூ..
என்னவள் இதல்கள் இரண்டும்…!

அவள் புருவ விற்கள்
வளையும் கணமெல்லாம்..
வேடன் இங்கே செத்துக்கொண்டிருக்கிறேன்..!.

கைதியாய் அடைபட நான் தயார்..
உன் இதயம் திருடிய கள்வன்
நான்தானென புகார் கொடு...!

காட்டிகொடுப்பது இங்கே தப்பில்லை…
உன் உறக்கம் கெடுத்தவனும்...
உள்ளக்கதவை உடைத்து நுழைந்தவனும்..
அனுமதியின்றி கணம் உன்னை நினைப்பவனும்..
கனவுகளை களவாடிச்சென்றவனும்..
இவன்தானென என்னை
எல்லோரிடத்திலும் காட்டிகொடுத்துவிடு…!

படைப்பவன் பிரம்மன் என்பது
பொய்யாய்த்தான் இருக்கும்...
உன்னை அவன் படைத்திருந்தால்
பிரிய எப்படி சம்மதித்திருப்பான்.....!

உன்னைப்போல் ஏழுபேர்
சத்தியமாய் உலகிலிருக்க வாய்ப்பில்லை..
அத்தனை அழகை நிச்சயம் தாங்காது
இப்பூமி.....!

அதிசயம் பார்த்தாயா..
உன்னைப்பற்றி உளருவதெல்லாம்
கவிதையென சேமிக்கின்றது
என் இதயப்புத்தகம்....!

இவையெல்லாம் மற்றவர்க்கெப்படியோ.......!!!
இருந்தாலும்……..
எனக்கு.....பொக்கிஷங்கள்....!!!!

அஸ்தமனமில்லை


மூடியிருந்தது இமைகள்...
தொலைந்திருந்தது தூக்கம்...
கண்ணீர் மறைத்து மனம் அழுதபடி இருந்தது...
காரணம் புதியதில்லை....
ஆனாலும் பழையதுமில்லை...
இரத்தம் இன்னும் கசிந்தபடிதான் இருக்கின்றது..
ரணம்.. ரணமாய்த்தான் இருக்கின்றது..
சொற்களால் சொல்லிவிட முடியுமா..
அவை கருத்துக்களின் பரிமாற்றத்திற்கானது..
கொந்தளிக்கும் உணர்வுகளின்
விம்பமாகும் வலிமையற்றது...
புண்ணாய்ப்போன உடலுடன்
புதையுண்டு கிடக்கிறோம்..
இன்னும் செத்துப்போகவில்லை... - அதை
துரோகத்தின் ஈட்டிகள் குத்துகையில்
வலி உறுதிசெய்கின்றது....
உயிருடன் புதைக்கப்பட்ட
உறவுகளின் இறுதி ஓலம்
இன்னும் செவிப்பறையில்
ஓங்கி.. ஓங்கி.. அறைகிறது..
உணரமுடிகிறதா உங்களால்...
சகோதரிகளின் ஆடைகள்
கிழிக்கப்பட்ட ஈனச்சத்தமும்
கணம் தொறும் சுயத்தில்
ஈட்டிகள் பாய்ச்சுகின்றனவே...
உணரமுடிகின்றதா உங்களால்...
தாம் தமிழனென்று அறியாமலே
உடல்சிதறி உருக்குலைந்துபோனதே
எம் பிஞ்சுத்தலைமுறை..
அதன் மொழியில்லா கதறல்கேட்கும்
ஆயிரமாயிரம் கேள்விகள்
இதயத்தை கருக்குமே...
உணரமுடிகின்றதா உங்களால்...
என்ன தவறிழைத்தோம்..
எவர்வீட்டு குடிகெடுத்தோம்...
வலிக்கின்றது.... உயிர் வலிக்கின்றது...
ஆயிரம் யுகங்கள் கழியட்டுமே..
சூழல் எதுவுமாய் மாறட்டுமே...
ஆறாத ரணங்கள் ஆறாமலேயே இருக்கும்..
அடிமனஎரிமலை குழம்பும்
கனன்றுகொண்டே இருக்கும்..
அது ஈழத்தின் பயணத்தை உயிர்ப்புள்ளதாக்கும்...
ஆனாலும்.. இன்றொன்று…
நரமாமிசம்தின்ற நரிகளின்
நர்த்தன காலம் இது....
மயங்கப்போவதில்லை தமிழன்....
மனம்வெந்து சொல்லுகிறான்..
எம் குலமழித்தவனே...
நிச்சயம் பார்ப்பாய்
உன் குலம் நாசமாய்ப்போகும்...!!!!!!