
முன்புபோல் இல்லை நான்...
எனக்குமட்டுமே புரிகின்றது....
கோபங்கள் என்னுடன் நேசங்கொள்ளவில்லை...
இரவுநேர கடிகார முள் ஓசை கேட்பதில்லை...
அனைத்துமே அழகாய் இருக்கின்றது...
அழகாய்இருப்பவையெல்லாம்
எதையோ அர்த்தப்படுத்துகின்றது....
அடிக்கடி திரும்பிபார்த்துக்கொள்கிறேன்...
அதிசயமாய் புன்னகைத்தும்கொள்கிறேன்...
முன்புபோல் இல்லை நான்...
வெற்றுத்தாள் கண்டால்.... சட்டைப்பையில்
பேனாவின் இருப்பை உறுதிசெய்துகொள்கிறேன்...
யாரும் இல்லா தனிமையில்... மெல்லதாய்
ஒரு பாடலை முணுமுணுத்துக்கொள்கிறேன்...
வார்த்தைகளுக்கான நேரத்தை
மிச்சப்படுத்தவும்...
மெளனங்களுக்காய் நேரத்தை
செலவழிக்கவும் பழகிக்கொண்டேன்...
முன்புபோல் இல்லை நான்...
என் படுக்கை அறை சுத்தமாய் இருக்கிறது....
புத்தக அலுமாறியை
கவிதைப்புத்தகங்கள் ஆக்கரமிக்கின்றது....
முற்றத்துப்புல்லை முத்தமிடும்
காலைப்பனி இரசிக்கவே
கனவுகளை உதறிவிட்டு
சோம்பல்முறிக்கும் விந்தை கொண்டேன்...
என் வீட்டு
கொய்யா மரத்தில் நின்று கத்தும்
காகத்தை துரத்திடவும்
ஏற்கவில்லை மனம்.... கண்டேன்...
முன்புபோல் இல்லை நான்...
எனக்குமட்டுமே புரிகின்றது....

No comments:
Post a Comment