Pages

Ganesh

Ganesh

Friday, May 7, 2010

12 – 04 – 2006 - திருகோணமலையின் ஒரு கரிநாள்


அன்று திருமலை நகர் இரண்டுதினங்களில் வரப்போகின்ற புதுவருடத்திற்கான எதிர்பார்ப்புகளோடு சுறுசுறுப்பாய் இருந்தது. மதியம் தாண்டிய வேளை… வெயில் தகித்துக்கொண்டிருக்க வீதிகளில் சனக்கூட்டம் சற்றேகுறைவாய் இருந்தது. எங்களது Dialog GSM Branch Officeஇனுள்ளும் நான்கு ஐந்து வாடிக்கையாளர்கள் மட்டுமே.
மதியம் 3.45 மணியிருக்கும் பெரிதாய் ஒரு வெடிப்புச்சத்தம். கட்டடமும் அதிர்ந்தோய்ந்தது. ஓடிச்சென்று வெளியில் பார்த்த நண்பன் ஏதோ Transformerவெடித்திருக்களாம் என்றான், மற்றையவன் உடனே பதட்டமாய் கத்தினான் மச்சான் ஒரு உடல் வீதியில் கிடக்குதடா.... விபரீதம் உணரத்தொடங்கியிருந்தோம், உடனடியாய் கதவுகள் இழுத்துப்பூட்டப்பட்டன. ஒரு Dialog Connection எடுக்க வந்திருந்த ஒருவரைதவிர மற்றையவர்கள் வெளியே ஓடிவிட்டிருந்தனர். அன்றையதினம் Security guardஉடன் சேர்த்து 5 பேர் மட்டுமே Office Staffs. ஆனாலும் எங்களுக்கு சிறிது நம்பிக்கை இருந்தது, அந்த இடத்திலுள்ள பெரும்பாலான சிங்களவர்கள் எங்களுடன் மிகவும் நட்புடனேயே பழகுபவர்கள், ஆதலால் ஆபத்து ஏற்படப்போவதில்லை, ஆனாலும் கொஞ்சம் விழிப்பாய் இருக்கவேண்டும் என எண்ணிக்கொண்டோம். மற்றையது எங்களுக்கான Security Guardஉம் ஒரு சிங்கள இனத்தவர்.

ஆனால் சில நிமிடங்களிலேயே எங்கள் நம்பிக்கைகள் அணைத்தும் பொடியாக்கப்பட்டது. எங்கள்வெளிக்கதவு உடைக்கப்பட்டு உள்கதவு முரட்டுத்தனமாய் இடிக்கப்படுகின்றது, கெட்டவார்த்தைகள் எங்கள் செவிகளை இடிக்கின்றது. உடைக்க முடியவில்லை கொழுத்திவிடுங்கள் என்ற காடையர்களின் குரலில் நாங்கள் சுயமுடைகிறோம். திடீரென நெருப்புப்பிழம்புகளுடன் வெளியே வெடிப்புச்சத்தங்கள் கேட்கின்றது, புரிந்துபோனது எங்களிற்கு, வெளியே நிறுத்திவைத்திருந்த எங்கள் Motor bikeகளுக்கும் நெருப்புவைத்துவிட்டார்கள். உள்ளே பெரும் புகை மூட்டம். Main switchஐகூட அணைக்கமுடியவில்லை. எங்கள் Officeஇன் பின் இருந்த சிறிய corridor மட்டுமே இப்போழுது எங்களிற்கு தஞ்சம். ஆனால் அங்கேதான் AC Machinesகளிதும் Ventilators இருந்தது. அதனால் எந்தவேளையும் அவை Current shortஆகி வெடிக்கக்கூடும் என்ற நிலை. Corridorமேல் பாதுகாப்பிற்காக நாங்கள் அடித்திருந்த உறுதியான வலை இப்பொழுது எங்களுக்கே பாதகமாய் இருந்தது, அதை வெட்டுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.

எங்களிற்கு அடுத்ததாய் இருந்த R.R.Group (Unilever Distributor) இற்க்கு உள்ளிருந்து காடையர்களின் வெறித்தனமான கத்தல் கேட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் எங்களை கண்டுவிட்டால் அடுத்தநொடி நாங்களும் கருக்கப்பட்டுவிடுவோம் என்ற பயம் எங்கள் மூச்சைக்கூட வெளியேற்ற பயத்தைக்கொடுத்துக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் R.R.Groupஉம் அதன் உள்ளிருந்தவாகனங்களும் தீப்பற்றி எரியத்தொடங்கிவிட்டிருந்தது. எங்கும் புகை மண்டலம். இத்தனைக்கு நடுவிலும் கைபேசிகளினூடாக வீட்டோடு கதைத்துக்கொண்டோம், அவர்களிடம் எங்கள் ஆபத்தின் தன்மையை சொல்லவில்லை, நாங்கள் பாதுகாப்பாய் இருப்பதாகவே சொல்லிக்கொண்டோம், அவர்கள் பதட்டமடைந்து இங்கே வந்துவிடக்கூடாது என்பதே எங்களது அப்போதைய எண்ணமாக இருந்தது, ஆனால் அவர்களை Fire serviceஇற்கும் Policeஇற்கும் உடனடியாய் தகவல் சொல்ல சொல்லியிருந்தோம். ஆனால் எங்களைப்பொருத்தவரையில் அதுவே அவர்களது குரல்கேட்கும் இறுதிசந்தர்ப்பம் என்றே எண்ணிக்கொண்டோம். நணபர்கள் அத்தனைபேரினதும் அழைப்புக்கள் வந்துகொண்டிருந்தது. அவர்களிடம் மட்டும் முடிந்தவரையில் எங்கள் நிலையைகூறி அறிவிக்கவேண்டியவர்களிற்கு உடனடியாய் அறிவிக்ககேட்டுக்கொண்டிருந்தோம்.

எப்படியாயினும் வெளியேறிவிடவேண்டுமென்ற இறுதிமுடிவோடு கையில்கிடைத்த கல்லு, இரும்பைக்கொண்டு வலையை உடைக்க மாறி மாறி முயறசித்துக்கொண்டிருக்க மேல் நோக்கிய துப்பாக்கிச்சூட்டுச்சத்தங்கள் சரமாறியாய் கேட்கத்தொடங்கியிருந்தது, கலவரத்தை கட்டுப்படுத்த(!) இராணுவம் வந்துவிட்டதை அறிந்துகொண்டோம். இப்பொழுது கைகள் கிழிக்கப்பட்டதையும் பொருட்படுத்தாது இயன்றவரை வலையை உடைய்த்துக்கழற்ற முயன்று கிட்டத்தட்ட 2 ½ மணித்தியாள போராட்டத்தின்பின் வலையை கழற்றிக்கொண்டு அந்த இடத்திலிருந்து வெளியேறி அடுத்திருந்த விவேகானந்தா தமிழ் மகா வித்தியாளயத்தினுள் குதித்து அங்கிருந்த 3 மாடிகட்டிடத்தின் 3வது மாடியில் பதுங்கிக்கொண்டோம்.

இப்போது வன்செயலில் சூறையாடப்பட்ட திருமலை நகரத்தை ஓரளவு காணக்கிடைத்தது. மத்திய வீதியில் Marketதொடக்கம் இராஐவரோதயம் வீதிவரையிருந்த அத்தனை தமிழ் உரிமையாளர்களது கடைகளும் தீயிட்டு கொழுத்தப்பட்டிருந்தது. எங்கும் புகை மண்டலம்…. எங்கும் இராணுவம்…. எங்களிற்கு உதவி கேட்கவும் பயம்…. பொதுமக்கள் யாரும் இல்லா வீதியில் நாங்களும் எதுவும் செய்யப்படலாம் என்ற அச்சம். பதுங்கியபடியே இருக்கின்றோம். நேரம் உருண்டோட ஓரளவு அமைதி நிலவத்தொடங்குகின்றது. உதவிகேட்க சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்க எங்கள் Officeஇற்கு அடிக்கடி வந்துபோகும் ஒரு Navy Commanderஐ கண்டுகொண்டதும் இதுதான் சந்தர்ப்பம் நடப்பது நடக்கட்டுமென்று அவரை அழைத்து உதவி கேட்க அவரும் எங்களை வெளியே அழைத்து பயப்படவேண்டாம் எனசொல்லி ஒரு இராணுவ சிப்பாயுடன் வித்தியாலயம் வீதிவரை சென்றுவிடுமாறு சொல்ல உயிர்தப்பிய ஆச்சரியத்துடன் கரிபடிந்துபோன உடல்களுடன் மீண்டுகொண்டோம். ஆனாலும் அன்று என்னால் பாதுகாப்பு காரணங்களால் வீடுசெல்ல முடியாதுபோக நண்பனின் வீட்டில் தங்கி மறுநாளே வீடடைந்தேன்.

இது எங்கள் மறுபிறப்பு. அந்த வன்செயலில் எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத எத்தனையோ அப்பாவிகளின் உயிர்கள் சூறையாடப்பட்டதும் பெண்கள் நாசமாக்கப்பட்டு கொள்ளப்பட்டதுமான கறைபடிந்துபோன உண்மைதகவல்கள் பல இன்றுவரை வெளிக்கொண்டுவரப்படவில்லை. அந்த பயங்கர இனவெறிஆட்டத்தில் ஒருவேளை நாங்கள் பலியாகிப்போயிருந்தால்கூட இன்றுவரை நடந்துபோன அத்தனை அநியாயப்படுகொலைகளில் ஒன்றாய் ஒரு செய்தியாய்மட்டுமே பதிவாகியிருந்திருக்கும் என்பதே யதார்த்தம்
.

Wednesday, April 7, 2010

ஈரம்


வெளியே மழையாலும்...
உள்ளே நட்பாலும்....
நனைந்து கொண்டிருக்கின்றது...
குடை...!!

எனக்காய் ஒரு வானவில்


சோ..வென்ற மழை....
என்னைமட்டும் வளைத்து வானவில்....
கடல் முத்தமிட குனிந்து விட்ட மலைஉச்சி...
தனிமையில் நான்...
கடிகாரத்தின் கால்களை கட்டிபோட்டுவிட்டு
இருகைகள் விரித்தபடியாய் உயிர்வரை நனைகிறேன்...
சட்டென்று இமைகள்திறக்க சுயம்விழித்தேன்...
அட... கனவு....
உடல் ஈரமில்லை... ஆனாலும் நனைந்துவிட்டிருக்கிறேன்...

Monday, April 5, 2010

என்னிலிருந்து காப்பாற்று...


நன்றி சொல்ல ஆசை...
ஆனாலும் பயமும் உண்டு....
சொல்லும் நன்றி
உதவிக்கு கைமாறாகிடுமோ...
இல்லை... நன்றியுடன்... செய்உதவி
காலாவதி ஆகிடுமோ...

என் செய்வான் இவன்...
கேவலம்... மனிதப்பிறவி ஆனானே..
உதவிசெய்தோன் உதவிசெய்யா தருணம்தோன்றில்
செய்நன்றி மறந்துபோவேன்
மீண்டும் அவனை திட்டித்தீர்ப்பேன்...
அன்றுசெய்த உதவிக்கோர்
நன்றிசொல்லி ஈடுசெய்யதேன் என
தன்னிலைக்கோர் ஞாயம் சொல்வேன்
சுயம் தின்று சுயமழிவேன்...

அவனும் அப்படித்தான் என
ஒற்றைவிரல் நீட்டி
சுட்டிட எத்தனித்தேன்
மறுவிரல்கள் மூன்றுமாய் எனைநோக்க
உச்சியில் நச்சென்றே குட்டுண்டேன்...

நான் சொல்லி மறந்ததும்...
சொல்லாமல் மறந்ததுமாய்
நன்றிகள் ஏறாலம்....
இனியேனும்... சொற்களுக்குள் புதைக்காது...
நன்றியை உணர்வோடு கலக்குமென்னம்விடுத்து
மீண்டும் முருங்கையேறிவிடக்கூடாது
என் மனமெனும் வேதாளம்...

ஆதலால்தான் இறைவா...
தாழிட்டு உன்முன்னே
விழிகசிய வேண்டுகின்றேன்...
என்னை... என்னிலிருந்து காப்பாற்று...
நான் நன்றி மறந்தால்... அச்சனமே
எனை மறிக்கச்செய்து பிணமாக்கு...

Wednesday, March 17, 2010

மரம்


மண் புதைந்த கரங்களுடன்

எழுந்து நிற்கிறேன்....

உன்னிடம் எதுவும் பறிப்பதில்லை நான்....

உணர்ச்சிகளற்ற உன்னை நானென்பாய்

எனையறிந்தும் அறியாதவனாய்...

அது ஆறறிவின் குணமென்று பொருத்துநிற்கிறேன்...

இது என் தேசம்... நீ ஒண்டவந்தாய்...

நான் ஒதுக்கப்பட்டேன்...

நீ பெற்றுப்போட நான் வெட்டப்பட்டேன்...

நீ செத்தபோதும் நனே வெட்டப்பட்டேன்...

உன் ஒவ்வொரு அசைவிற்கும் நான் தேவை...

நீ அறிந்துகொள்... எனக்கு நீ தேவையில்லை...

நான் காப்பவன்... நீதானே அழிப்பவன்...

நீ சுவாசிக்கும் காற்றும்..

ஜீவிக்கும் நீரும் எனது பிச்சை...

இந்த மண்ணிற்கு உரமும்...

நீ உயிர்வாழ பலமும்… எனது கொடை...

வான் பெய்யும் மழையும்...

மண்ணோடும் நதியும்... என் ஸ்ருஷ்டி...

சுயநலத்தின் குத்தகைக்காரன் நீ...

உனக்குமாய் உணவு சேர்ப்பவன் நான்...

காக்கைக்கும்.... குயிலிற்கும்

பேதமை இல்லை என்னில்...

என் உடல் தறித்த நீ விட்டுவைத்தால்

மீண்டும் தளிர்த்துக்கொள்வேன்...

கலைப்படைவாய் நீ.. என் கீழே வந்தொதுங்கு...

நிழல்தருவேன் நான் மறுப்பின்றி உனக்குமாய்...

பேதை மனிதா…. ஒருமொழி கேளாய்

உயர்தினையென்று.. நீயே உன்னை பீத்திக்கொள்...

மரமென்று மட்டும் உனை வையாதே....

நாங்கள் உயர்ந்தவர்கள்....

Friday, March 12, 2010

அந்திச்சபதங்கள்


என் உள்மன வேர்களில் விழட்டும்

உன் கோடரி....

ஆழி என்னுள் புகுந்து

மொத்தமாய் சுருட்டிச்செல்லட்டும்

நீ பற்றிய நினைவுகளை...

பற்றிபடரும் காட்டுத்தீ

என்னிலும் நுழைந்தெரிந்து

கருக்கிச்செல்லட்டும்

என் ஞாபகச்சருகுகளை...

வறண்ட நிலத்தில்

விழுந்த நீர்த்திவளையாய்

காணாமல்போகட்டும்

கசந்துபோன எண்ணக்குப்பைகள்..

விழித்தெழும் வேளை

சூரியன் புதிதாய் முளைக்கட்டும்...

உன்னை ஞாபகம்செய்யும் நிலவு

இவ் இருளோடு தொலைந்துபோகட்டும்...

நாளை வேறு புதிதாய்

கறைகழுவிய நிலவு பிறக்கட்டும்...

இவ்விரவு தூக்கத்தோடு நான் இறந்துபோய்

புதிய பொழுதின் புலர்வின்போது

உனை முதல்கண்ட நொடிக்கு

முன்னைய கணம்வரையிருந்த

நானாய் மறுபிறப்பெடுப்பேன்...

இப்படியான….

ஒவ்வொரு இரவுச்சபதமும்

தோற்றுப்போகிறதடி என் காலையின் புலர்வில்...

Wednesday, March 10, 2010

THE HURT LOCKER


6 Oscar Awardsஐ தனதாக்கிக்கொண்ட சினிமா எனும் ஈர்ப்பினால் பார்க்கமுனைந்த படம். இயக்கியிருப்பது Kathryn Bigelow எனும் பெண் இயக்குனர். ஈராக்கில் பணிபரியும் U.S Army Explosive Ordance Disposal (EOD) Unit மையப்படுத்திய கதை, களம் ஈராக் War. மூன்று கதாபாத்திரங்களே கதையை பெரும்பாலும் நகர்த்துகின்றது. Sergeant William Jamesஆக Jeremy Rennerஉம், Sergent J.T.Sanbornஆக Anthony Mackieஉம், Owen Eldridgeஆக Brain Gereghtyஉம் நடித்திருக்கின்றார்கள். சினிமா என்பதை நம்ப மறுத்து ஈராக்கின் வீதிகளில் ரசிகனையும் படபடப்புடன் நிறுத்திவைக்கின்றது ஒளிப்பதிவும் இசையும். எங்கேயும் அத்துமீறா பின்னனி இசை பல இடங்களில் மெளனமாகி உண்மைத்தன்மையுடனான சத்தங்களை மட்டுமே பதிவாக்கி களத்தை முன்நிறுத்துகின்றது. காட்சியின் ஒவ்வொரு நகர்வும் மிரட்டல்.

முதன் முதல் குண்டை செயலிழக்கும் முயற்சி தோல்வியாவதிலிருந்து அடுத்துவருகின்ற ஒவ்வொரு குண்டு செயலிழக்கும் காட்ச்சிகளின் போதும் இதயத்துடிப்பு எகிறுவதை கட்டுப்படுத்த இயலவில்லை. அந்த பாலைவன Sniper gun தாக்குதலுக்கான காத்திருப்பின் போது Jeremyயும் Eldrichயும் சோர்ந்துபோகும் சந்தர்ப்பங்களில் ஏதேனும் விபரீதம் நடந்துவிடுமோ என ஒவ்வொரு நொடியும் பயங்கொள்ளச்செய்கிறது. வெடிமருந்துகள் நிறைந்துகிடக்கும் ஒரு Warehouseஇல் கிடக்கும் வெடிபொருள் வைத்து தைக்கப்பட்ட சிறுவனின் உடல் இராணுவ முகாமிற்கருகில் DVDவிற்கும் சிறுவனுடையது என நினைத்து Eldridgeஅழுகின்ற காட்சியிலும் அதைத்தொடர்ந்துவருகின்ற எதிர்பாராத குண்டுவெடிப்பும் நெஞ்சை நெகிழ வைத்துப்போகின்றது. தன்னைகாப்பாற்றச்சொல்லி ஒரு தற்கொலைக்குண்டுதாறி கெஞ்சுவதும் அதுமுடியால் போக அவன் வெடித்துசிதறியபின்னர் அதிர்வில் தாக்கப்பட்டு கீழவிழுந்த Eldrichவிழித்துப்பார்க்கையில் இது எதையுமே பெரிதாய் எடுத்துக்கொள்ளாத ஒரு சிறுவன் மொட்டைமாடியில் நின்று பட்டம் விடுகின்ற பதிவொன்றே அங்கே மலிந்துவிட்ட மரணங்களை அப்பட்டமாய் காட்டி நிற்கின்றது.

யார் எதிரி, யார் பொதுமகன் என இனங்கான முடியாமல் சிப்பாய்கள் தடுமாறுகின்ற காட்ச்சிகளில் பதட்டம் எமக்கும் தொற்றிக்கொள்கிறது. சரி தவறு என்ற கேள்விகளிற்கப்பால் கொடுக்கப்பட்ட பணிக்காக வேறு ஏதோவொரு தேசத்தில் போரிட்டு பரிதாபமாய் இறந்துபோகின்ற ஒவ்வொரு இராணுவ வீரனும் சாதாரண உணர்ச்சிகள், குடும்பங்கள் என எல்லோரையும் போலவே வாழ்வுரிமைகொண்ட மனிதன்தானே என்கின்ற உண்மை மறுக்கப்படமுடியா து சுயத்தை ஏதோ செய்கிறது. இந்த வாழ்க்கை வேண்டாமென்ற முடிவுடன் வீடு திரும்பும் Eldridge சாதாரண வாழ்க்கையுடன் பயணிக்க இயலாது மீண்டும் ஈராக திரும்பி இன்னுமொருவருட Commitmentஉடன் Bomb Disposal Suit அணிந்து ஈராக்கின் வீதியொன்றில் குண்டு செயலிழக்கச்செய்யும் நடவடிக்கைக்காய் நடந்து செல்கையில் அந்த வெறுமையான வீதியைப்போலவே பயங்கரத்தைஒழித்துவைத்திருக்கும் இன்னும் ஏதோவொரு நிச்சயமற்ற கணத்தை நோக்கிய அவனது பயணத்திற்காய் என் கண்களின் ஓரமும் தன்னிச்சையாய் ஈரமானது.

Tuesday, March 9, 2010

“ஏக்கம்”


நான் கவிஞன் அல்ல...
எண்ணங்களின் பகிர்வாளன்...
கவிதை சொல்லத்தெரியாது...
ஏதோ ஒன்றை எழுதத் தெரியும்....
இருந்தும் நண்பி சொன்னாள்...
கவி சொல் என்று....
கரு எது… நான் கேட்க...
“ஏக்கம்” என சொல்லிச்சென்றாள்...
அடி பெண்னே...
அது ஒற்றைச்சொல் அல்ல...
உணர்வுகளின் கருவூலம்...
பெரியோனே தெளிதல் கடிது...
நான் சிறியோன்...
இது சுமை சொல்...
எங்கே தொடங்குவேன்....

கூடு கலைந்து பறந்தோடி
எட்டநின்று கண்ணீர்விடும்
ஈழத்து அகதிக்குருவிகளின்
ஏக்கத்தை தவிப்புடன் சொல்வேனா...!
சாட்சியின்றி புதைந்துபோன
உறவுகளின் ஆன்மாக்கள் இங்கே
எம்மிடேயே புலம்பி அழும் ஏக்கத்தை
நானும்…தமிழனாய் சொல்வேனா....!
வித்திட்டவர் சிதைந்துபோக
வாழ்வின் அடி நுனி சிக்கலில்
சிக்கித்தவிக்கும் எம் பிஞ்சுகளின்
ஏக்கத்தை… கதறலுன் சொல்வேனா...!
தாய் மண் மடியில் மறுக்கப்பட்டவாழ்வுதேடி
கூடிக்கழித்த உறவுகள்.. நண்பர்கள் விலக்கி
இரவல் மண்மிதித்து மிதியடியாய் வாழும்
எம் சோதரர் ஏக்கங்களை
விழிகசிய நான் சொல்வேனா...!

இல்லை... இவைவிடுத்து வெளிச்சென்று....

பொன்னிற்காய்... பொருளிற்காய்...
பெண்ணிற்காய்... ஏங்குகின்ற
பேதைகளின் ஏக்கம் என்று...!
தொலைந்துபோன பொருள்தேடி
தோற்றுப்போனவன் ஏக்கம் என்று...!
தவறிவிட்ட உறவுதந்த
வெறுமையின் உள்ளிருந்து
பிரிவு சுமந்தவன் ஏக்கம் என்று...!
உடைந்துபோன காதலுக்காய்
ஆயுளின் இறுதி நிமிடநேரம் வரையில்
வெளித்தெரியாமல் பொத்தி வைத்திருக்கும்
காதலித்தவர் ஏக்கம் என்று...!
பொழுதுகளெல்லாம் உறங்கிகெடுத்து
இருண்டபின் விழித்தெழுந்து
புலம்புபவனின் பொருள்ளற்ற ஏக்கம் என்று...!
பலன் பார்த்து.. நட்சத்திரம் பார்த்து
செயல் காணும் மூடர்களின்
நல்லநாள் பற்றிய பலனற்ற ஏக்கம் என்று…!

இப்படியாய்... இன்னும்.. இன்னுமாய்...
ஓராயிரம் பார்வைகொண்ட
ஒற்றைச்சொல்லடி இவ் ''ஏக்கம்''...
நான் சிறியோன்...
தொடாதது இன்னும் அதிகம்....
தொட்டதோ இங்கே கொஞ்சம்....
என்னை ஆட்டிவைக்கின்றது இந்த ஏக்கம்...
நான் எப்படிச்சொல்வேன் எனும் ஏக்கம்....

மன்னித்துவிடு...
நான் கவிஞன் அல்ல...
எண்ணங்களின் பகிர்வாளன்...
கவிதை சொல்லத்தெரியாது...
ஏதோ ஒன்றை எழுதத் தெரியும்....!!!

Monday, March 8, 2010

Paa - ஒரு பார்வை


கொஞ்சம் காலம் தாழ்த்திய பார்வைதான்என்றாலும் இப்பொழுதுதான் எனக்கு காணக்கிடைத்தது, ஆதலால் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற ஆவலும் தோன்றிற்று.

மனதை கனக்கவைக்கும் கவிதையாய் ஒரு சினிமா. ரத்தம், Punch Dialogs, காட்டுக்கத்தல், இரட்டையத்த வசனங்கள், நடைமுறையிலிருந்து விலகி நிற்கும் காதல் என்றே சலித்துப்போய்க்கிடந்த ரசிகர்களிக்காய் மெல்லிய மழைத்தூரலாய் நனைத்துச்செல்லும் களம் என மனதோடு நெருக்கமாகிவிடுகின்ற கதை. ஆங்கில உப தலைப்புடன் பார்க்கக்கிடைத்ததால் வேற்றுமொழிப்படமென்ற உணர்வு மறந்து கதையுடன் ஒன்றிப்போகமுடிகின்றது. ஆரம்ப எழுத்தோட்டமே ரசிகனை கதைக்குள் இழுத்துவைத்துக்கொள்கின்றது.

Progeria என்ற நோய் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் அந்த வாழ்க்கைக்கு அருகிருந்து பார்க்கும்போது நெஞ்சம் பாரமாகின்றது. மூன்று கதாபாத்திரங்களைச்சுற்றியே வட்டமிடும் கதை எங்கேயும் தொய்ந்துபோகாதது திரைக்கதையின் பலம். இசை இளையராஜா, 80களின் இளையராஜாவை மீண்டும் காணக்கிடைக்கிறது. ஏற்கனவே மனதை திருடிச்சென்ற பாடல்கள் ஆங்காங்கே பின்னனி இசையிலும், ஒரு பாடலுமாய் என அழகாய்த் தொட்டுச்செல்கின்றது. பி.சி.சிறிராமின் கமரா கதையுடன் கைகோர்த்து நடக்கின்றது. வசனங்கள் அருமை. நடிகர்கள் சரியான தேர்வு. தாயாய் வித்தியா பாலன் முழுமை சேர்க்கிறார். இளம் MPயாய் அபிசேக் பச்சன்… ராகுல் காந்தியின் style தெரிகின்றது, freshஆக இருக்கின்றார்.

எல்லாவற்றிற்கும் மேலாய் கதையின் நாயகன் 13 வயது சிறுவன் Auro, 68 வயது அமிதாப்பச்சன் என்பதை நம்ப முடியாமலே இருக்கின்றது. தன்னைத்தவிர யாருமே இந்த பாத்திரமாய் வாழமுடியாது என மனுசன் சொல்லாமல் சொல்கிறார். குழந்தைதன குறும்புகளுடன் எல்லைமீறாத அந்த கதாப்பாத்திரமே கவிதை பாடுகின்றது.

Indian President ஐ பார்க ஆயத்தமாகி அது முடியாமல்போக யாருடனும் பேசாமல் அறையை பூட்டிக்கொண்டிருப்பதும் அம்மாவும் பாட்டியும் video game விளையாட ஆற்றாமல் வந்து அதை பறித்து தான் விளையாடுவதும் குழந்தைத்தன psychological touch. President ஐ காண செல்வதைப்பற்றி பாட்டி நம்பிக்கையின்றி பேசும்வேளையில் அந்த குரங்கு பொம்மையிடம் போய் Aren’t u a non vegetarian? Eat her up என்று சொல்வதும், பாட்டியை Bumb என்ற அழைப்பதற்கான காரணத்தை அபிசேக்கிடம் குழந்தை தனத்துடன் சொல்வதும், தன்னுடன் அடிக்கடி பேச வரும் அந்த சிறுமியை கண்டு விலகி ஓடுவதும், அதற்கான காரணத்தை இறுதிகாட்சிகளில் சொல்வதும் என சின்ன சின்ன காட்சிகளைகூட அழகாய் சொல்லியிருக்கிறார்கள். அபிசேக்கின் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகளில் மட்டும் லேசாய் சினிமாத்தனம் தெரிகின்றது, அது தவிர்க்கப்பட்டிருக்களாம். நோயின் தன்மை வெளித்தெரியும் சந்தர்ப்பங்களில்அந்த சிறுவனுடன் சேர்ந்து எங்களின் இதயமும் அடித்துக்கொள்கிறது. ஊகிக்கக்கூடிய முடிவுதான் என்றாலும் மனதை பாரமாக்கிவிடுவது அமிதாப்பின் நடிப்பு.

இப்படியான வேறுபட்டகோணங்களினூடான சினிமாவின் யதார்த்தங்களினூடான பயணமே ரசிகனை பூரணமாய் திருப்திப்படுத்த முடியும். இப்படியான பயணத்தை தமிழ் சினிமா எப்போதுஆரம்பிக்கப்போகின்றது.

மொத்தத்தில் இக்கவிதையை எழுதி இயக்கிய Director R.Balkiஇற்கு ரசிகர்கள் சார்பாக ஒரு Hug கொடுக்கலாம்.

Tuesday, March 2, 2010

காதல் தோல்வி


கடற்கரை….
சுண்டல்….
இரு நண்பர்கள்….
ஒருவன் சோகமாய்….
ஒருவன் கேள்வியாய்…..
மச்சான் என்னடா நடந்தது...
காதல் தோல்விடா...
காதல் தோற்காது.. நீ தோற்றாய் என சொல்...
ஏதோ ஒன்று.. மொத்தத்தில் தோல்வி மிச்சம்...
இருக்கட்டும்... நடந்தது சொல்...
உனக்கே தெரியுமே.. நான் காதலித்தேன்....
நீ மட்டுமே காதலித்தாய்.. ஒருதலைக்காதல்....
காதலின் ஆரம்பம் ஒருதலைதானேடா....
சரி... நீ காதலின் ஆரம்பத்திலிருந்தாய்... மேலே சொல்...
அவளுக்கு கவிதையென்றால் உயிர்....
ஓ.. கவிதைக்கு கவிதை உயிரா...
வெந்தபுண்ணில் வேலைப்பாய்ச்சாதே...
சரி.. சரி... அதற்கும் உன்தோல்விக்கும் ஏது சம்பந்தம்....
அவளிற்கு காதலன் கவிஞனாய் வேண்டுமாம்...
போச்சுடா… முதல்பந்தே உனக்கு இப்படியா…
எனக்கு கவிதையே வராது....
அதுதான் ஊரறிந்த விசயமாச்சே....
நானும் முயற்சித்தேன்... என் அறைதான்குப்பையானது...
அதற்குமுன்மட்டும் சுத்தமாய் இருந்ததோ...
கிண்டல்செய்யாதே... அழுதுவிடுவேன்...
செய்யவில்லை..நீ செப்பு...
முடிவில் கள்ளமாய் ஒரு வழி கண்டேன்...
அதுதான் உனக்கு கை வந்த கலையாச்சே...
நண்பன் ஒருவனின் கவி திருடி அவளிடம் சேர்ப்பித்தேன்..
அடப்பாவி... ஆனாலும் கைகூடியிருக்கவேண்டுமே காதல்...
இல்லையடா... விளையாடி விட்டது விதி என்னில்…
நீ என்ன மைதானமா.. விதி உன்னில் விளையாட.. நடந்ததுசொல்…
கைமாறிப்போனதடா என் காதல்...
உன் காதல் என்ன ரூபா நோட்டா... விசயத்திற்கு வா…
அவள் அவனுடனே கூடிவிட்டாள்...
அவனென்றால்... உண்மையில் கவியெழுதியவனா...
ஆமாமடா... அவனேதான்... துரோகி...
என்ன கொடுமையடா... எப்படியடா நடந்ததிது....
கவிதான் என நினைத்து.....
கவிதான் என நினைத்து.....???
கவி முடிவில் இருந்த அவன் பெயரையும் அன்றோ
எழுதிகொடுத்துவிட்டேன் அவளிடம்....
போடா…… ஆஐஉஉஇ ஊஏஎள புபநசஞகூ கடமற.....
(இவனை இப்படியாய் திட்டாமல் என்செய்வான் நண்பன்)

Thursday, February 25, 2010

இசை தேடும் கவிதை


உருகி உருகி வழிந்து

மீண்டும் இருகிப்போகிறேன்...

வானவில்லாய் வளைந்து தேடி

கலைந்துபோகிறேன்...

அழிந்துபோகும்... தெரிந்தும்

கரையில் எழுதிவைக்கிறேன்..

கனவே... உனைக்கானவே

தினம் நான் கனவு காண்கிறேன்....

(உருகி உருகி வழிந்து....)


தேகம் உன்னால் எரியும்

நான் விறகாய் சாகிறேன்...

நீ களவுகொண்டு போக

வெறும் கூடாய் நோகிறேன்...

வெயில் கொதிக்கும்போதும்

நான் பனியில் உறைகிறேன்..

என் தனிமை தவிக்கும் நேரம்

மழையில் கனலாய் வெடிக்கிறேன்…

உயிரை தீண்டி.... உணர்வை கொழுத்தி

ஒழிந்துகொள்கிறாய்..

நான் உடைவேன் என்று தெரிந்தும்

விழியால் மோதிச்செல்கிறாய்...

வரமாய் ஒரு சொல் தருவாய்

நான் வேண்டிநிற்கிறேன்....

சாபமேனும் தந்துசெல்லேன்

என் உயிர் பிழைத்திடுவேன்...

(உருகி உருகி வழிந்து...)


நினைவுச்சுவற்றில் உன் பெயர்

மட்டும் எழுதி வைக்கிறேன்...

உன் சிரிப்பின் இசைக்கு

வரிகள்கோர்த்து பாடிப்பார்க்கிறேன்...

நீபோகும் சாலையில்

நானும் நடந்து சிலிர்த்துப்போகிறேன்..

உன்னை கடக்கும் நொடியில்

நூறுமுறை தினம் செத்துப்பிழைக்கிறேன்...

நரம்பில்புகுந்து... சுயத்தைபிழிந்து...

என்னில் கலகம் செய்கிறாய்...

அடிமை சாசனம் எழுதித்தந்தும்

வம்பாய்... போர்தொடுக்கின்றாய்...

என் காதல் ஒருநாள் உணர்வாய்

என்றே காத்திருக்கின்றேன்...

இல்லை... என்கல்லறைமீதெனிலும்

கண்ணீர்விடு.. நான் மோட்சமடைந்திடுவேன்….

(உருகி உருகி வழிந்து....)

Wednesday, February 24, 2010

இணைத்து இணைவோம்..


நீயும்.. நானும்... ஒன்றல்ல...
இருந்தும் உனக்கும் எனக்குமாய்
அழகிய பொருத்தங்கள் ஏராளம் உண்டு...
இதோ எடுத்துக்கொள்வோம்
என்னிடம் நீயும் உன்னிடம் நானும்...
நட்பின் சிதறல்களை...!
பொருந்தும்போத தெரியும்
நம் நட்பின் இறுக்கமும்
அழகாய் அதன் உருவும்....உண்மையாய் ...!!!

Tuesday, February 16, 2010

இரவுகள் ஒத்திவைக்கப்படுகின்றது….


நிலவின் பூரணமும்...
நட்சத்திரங்களின் சிமிட்டலுமாய்
நிறைந்திருந்தது வானம்...
கறுப்பாய் மதி மறைக்கும் மேகம்
எங்கும் தென்படவில்லை...
ஆதலால் மழையில்லை...
கொடியில் உலரப்போட்ட ஆடைகள்
உலரட்டும்...
எங்கோ ஒரு சில்வண்டுமட்டும்
நிசபத்தத்தில் துளையிட்டுக்கொண்டிருந்தது...
காற்றுக்கும் மரங்களுக்குமாய்
ஏதோ ரகசியம் பேசப்பட்டுக்கொண்டிருந்தது...
ரகசியம் ஏன்... நீங்கள் சத்தமிட்டே பேசுங்கள்
நாங்கள் மனிதப்பிறப்புக்கள்...
எங்களிற்கு உங்களின் மொழி புரியாது...
குருவிகளெல்லாம் தூங்கிவிட்டிருக்கும்
நாளையின் ஆச்சரியங்களுக்காய்
அவை அலட்டுவதில்லை....
வால்வெள்ளியொன்று
தூரத்தே நீண்டுமறைந்தது...
வால்வெள்ளிகண்டால் பூவொன்றை நினைத்துக்கொள்...
பாட்டி சிறு வயதில் சொன்னாள்...
இப்போது சிலாகித்துக்கொண்டேன்...
சுவாரசிய கதைகள் எல்லாம்
அவளுடனேயே விலகிப்போனது...
இப்படியே... இந்நொடியே....
இருட்டினுள் கரைந்துபோனால் என்ன...
நாளை மீண்டும்… கடிகாரத்தினுள்
தொலைந்துபோகவேண்டியிருக்காது….
இந்த இரவு எத்தனை பேரால்
இரசிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்...
எத்தனை இரவுகள் இதுபோல் என்னால்
இரசிக்கப்படாமலேயே தொலைக்கப்பட்டிருக்கும்...
அம்மா அழைக்கிறாள்....
மகன்.. வெளியில பனி விழுது.. உள்ள வா..
நாளைக்கு வேலைக்கும் போகவேணும்...
சுருட்டப்பட்ட இரவுடன்
நாளைக்காய் உறங்கப்போகிறேன்….
மீண்டும் ஓர் மின்சாரமில்லா இரவுவரை
என் இரவுகள் ஒத்திவைக்கப்படுகின்றது....!!!

மூழ்கி முகிழ்வேன்

வாழ்வதற்க்காய்
முக்குளிக்க மூழ்கிப்போனேன்...
சரலைக்கற்கள் மட்டுமே
விரலிடுக்கில் சிக்கிக்கொண்டது...
முயன்று... முயன்று... தோற்றுப்போக..
கஞ்சலுடனேயே கரை முட்டினேன்...
கடல்நீரோடு கலந்துபோனது வியர்வையென்று
முட்டிமோதிய எனக்கே வெளிச்சம்...
கைதட்டல் இல்லை...
கைகுலுக்கல் இல்லை....
தட்டிக்கொடுக்கும்கரங்கள்
வேறுவேலையில் சிரத்தையாய் இருந்தது...
அலட்சிய நோக்குதல்கள் அசிங்கமாய்
அவ்வப்போது உடலுரசிச் செல்கிறது...
அவமானம் புதிதில்லைதான்...
ஆனாலும் ஒவ்வொருமுறையும்
வலி தந்துவிட்டுத்தான் செல்கிறது....
நாட்களுக்காய் நானோ....
எனக்காய் நாட்களோ...
காத்திருக்கப்போவதில்லை...
அழுக்காயிருந்தாலும்
நான் என்னுடனேயேதான் இருந்தாகவேண்டும்...
நம்புகின்றேன்... என்னைப்போன்றே
எனக்கான முத்துச்சிற்பியும் எங்கோ...
சரலைகளுக்குள்ளேயோ...
கஞ்சல்களிற்குள்ளேயோ...
எனக்காய் காத்துக்கிடக்கின்றது...
உடலொட்டிய மண் தட்டிக்கொண்டு
இதோ மீண்டும் எழுந்துவிட்டேன்....
என் வியர்வையையும்... கண்ணீரையும் மறைக்க
அதோ கடல் இருக்கின்றது...
எனக்கான கரகோசங்களும்....
வாழ்த்துக்களும் இன்னும் செலவழிக்கப்படாமல்
சேமிப்பில்தான் இருக்கின்றது...!!

Monday, February 15, 2010

வழிதவறிய மேய்ப்பனின் ஆடுகள் நாங்கள்….


நாங்கள்
கருவிலிருந்தே கசக்கியெறியப்பட்டவர்கள்...
சருகுகளாகவே தளிரானவர்கள்....
கருகிய விதையில் வித்தானவர்கள்...
சிசுவிலேயே சிலுவை ஏறியவர்கள்....
பாவத்திற்காய் பரிசானவர்கள்...
வழிதவறிய மேய்ப்பனின் ஆடுகள்...
தவறரியாமலேயே தள்ளிவைக்கப்படுபவர்கள்....
வேர்களினாலேயே நஞ்சூட்டப்பட்டவர்கள்....
இன்றைய நிலையில்
விஞ்ஞானத்தினாலும் விடுவிக்கமுடியாதவர்கள்....
ஆமாம்…
எயிட்ஸ் என்னும் எமனிடம் தத்துக்கொடுக்கப்பட்டவர்கள்…

நாங்கள்....
அசிங்கங்களல்ல...
தொட்டால் தொற்றும் கிருமிகளல்ல...
கொலையாளி வம்சங்கங்களல்ல...
பட்டால் பற்றிக்கொள்ளும் சாபங்களல்ல...
உணர்வுகளற்ற சதைபிண்டங்களல்ல...

மறுக்காதீர்கள்... நாங்கள்....
சபிக்கப்பட்டதும்...
உருக்குலைந்ததும்...
சிறுகதையானதும்...
இருண்டுபோனதும்...
கந்தலாய்க்கிடப்பதும்...
ஒதுங்கிச்சாவதும்...
உங்களினாலேயே... மறுக்காதீர்கள்...

நாங்கள்....
பெரிதாய் எதுவும் கேட்கவில்லை...
வாழும் வரை வாழவிடக் கேட்கிறோம்...
எங்களிடம்...
புன்னகைப்பதால் புண்ணாய்ப்போகமாட்டீர்கள்...
அருகிருப்பதால்... அழுகிவிடமாட்டீர்கள்...
சுவாசம்பட்டால் சுடுகாடு போய்விடமாட்டீர்கள்...
எங்கள் எச்சில்கூட ஏதும் செய்யாதுங்களை...

மனங்களையும்.... மனிதத்தையும்....
விசாலமாய்த்திறந்துகொள்ளுங்கள்...
அன்பும்... அரவணைப்பும்...
எங்களையும் தாங்கிக்கொள்ளட்டும்...
எல்லோர்க்கும் பொதுவான உலகில்
வாழும் சில நாட்களும்
வாழ்ந்துவிட்டுப்போகிறோமே நாங்களும்....!!!

Friday, February 12, 2010

அவனாய் அவள்….


அன்றும் இருட்டுக்குள் பாதுகாப்பாகவே சுருண்டிருந்தேன்...ஆனாலும் வழமை மீறிய அழுத்தம் மெதுவாய் என் மீது பரவத்தொடங்கிற்று... என் இதயத்தின் துடிப்பும் இலேசாய் அதிகரிக்கின்றது... அதுவரை பவளப்பேழைக்குள் முத்தாய் பத்திரப்படுத்தப்பட்டிருந்த நான் திடீரென கிடைகள் மாறுகின்றேன்... தூரத்தில் மிக மெல்லியதாய் ஒரு அழும் குரல் கேட்கின்றது... எனக்கு கொஞ்சமாய் புரியத்தொடங்குகின்றது...நான் இதுவரை காணாத ஒன்றை காணப்போகின்றேன்...என்னால் உணர்வுகளை வெளிப்படுத்த முடிவதில்லை…. ஆனாலும் அது ஒரு பொருட்டல்ல அப்போது...

அடிக்கடி வந்துபோகும் என் உயிர் நண்பன் அருகே வந்து என் பொத்திய கைகளுக்குள் ஆதரவாய் தன் கரங்களை பொதித்துக்கொண்டே சொன்னான்... உன் பயணம் தொடங்கப்போகிறது... புதிர்களும் ஆச்சரியமுமாய்... கண்ணீரும் கலகலப்புமாய்.. வெற்றிகளும் தோல்விகளுமாய்... அரவணைப்பும் அதிர்ச்சிகளுமாய்…. இன்னும் பலதாய் உன் பயணத்திற்கான வாசல் திறபடப்போகிறது... ஆனாலும் இப்படியாய் உன்னுடன் நான் கூடவர முடியாது என்றான்….. முதன்முதலாய் அதிர்ந்துபோனேன்... கதறவேண்டும்போல் இருந்தாலும் கண்கள் மூடிக்கிடந்தது... எனை நீங்கிப்போகாதே... உனையன்றி நான் தனித்தில்லை... நீ துணையில்லா பயணம் எனக்கு வேண்டாம்... நான் கெஞ்சிக்கொண்டேன்... என் வேண்டுதல்களின் தொடக்கம் அது...!

நண்பனின் இதல்களிடையே புன்னகை பிரசவமாயிற்று... உன் கலக்கம் வீண் என்றவன் சொன்னான் இப்படியாகத்தானே வருதல் கடினம் என்றேன்... இன்னுமொரு அழகிய உருவில் உனக்காக நான் அங்கே காத்துக்கொண்டிருக்கிறேன்... தைரியம் கொள் என்றான்... இன்னுமொரு உருவிலென்றால் எப்படி உனை நான் இனம் கண்டுகொள்வேன் என்றேன்... என் கேள்விகளின் தொடக்கமது…..!

மீண்டும் அதே புன்னகையுடனேயே கூறி நின்றான்... கண்டதும் நீ கண்டுகொள்வாய்... என் உருவ ஒளி அவளில் தெரியும்... உனக்காய் அவள் தன் வாழ்வளிப்பாள்... உன்னை அவள் மடிக்குள் பொக்கிசமாய் பொத்திவைப்பாள்… என்னிலும் அவளே உனக்கு நெருக்கமாவாள்… உன் முதல் வார்த்தையின் அர்த்தம் அவளை அர்த்தப்படுத்தும்...!! அவனின் அழகுப்பதில் கேட்டு ஆர்வம் பொங்க… இந்நொடியே அவளை கண்டிட பொறுமைகலைந்தேன்... இறுதியாய் ஐயம் தீர்க்க கேட்டுக்கொண்டேன்... நண்பா நீ யார்... இத்தனை நாளாய் என் அருகிருந்தாய்... அன்பாய் எப்பொழுதும் எனை அரவணைத்திருந்தாய்... தனிமை கலைத்து மகிழ்ச்சியில் எனை சூழ்ந்திருந்தாய்.. நண்பா என்றே உனை அழைத்திருந்தேன்.. உன் பெயர்தான் என்ன கேட்டுக்கொண்டேன்…! மீண்டும் புன்னகைத்தே பதிலுறைத்தான்... உன் பயணத்தில் என்னை நீ கடவுள் என்பாய்... உன்னருகே நான் இருந்தபோதும் எனைத்தேடி அழைந்து உனை மனிதனென நிருபிப்பாய்... இந்தநேரம் இதுபோதும்... இனி கேள்விகளுக்குள் உனக்கான பதில் முளைக்கும்..

இதோபோராட்டம் தொடங்கிவிட்டிருந்தது... உள்ளிருந்து பெரும்விசைகொண்டு நான் தள்ளப்பட என் தலை பற்றி இருகரங்கள் வெளியிழுக்க நான் புதிய பயணத்திற்காய் குருதியில் தோய்ந்த உயிர்ப்பிண்டமாய் இரு கால் இடுக்கில் வெளிவிழுந்தேன்... இத்தனைநாள் என் பசி கலைத்த கொடியொன்று என் தொப்புளிலிருந்து அறுபட ஒரு உயிர் இரு உயிர்களானது... தாதி என்னை தூக்கிக்காட்டினாள் அவளிடம்…… உன் மகன் பாரென... ஆனால் நான் கண்டுகொண்டேன்…. என் நண்பனின் ஒளி அவளில் தெரிந்தது... சந்தோசமும் அழுகையும் ஒன்றிணைய…… வார்த்தைகள் வசப்படாததால் எனக்குமுடிந்தவரையில் அர்த்தப்படுத்தி கத்தினேன்..... அம்மா (ங்ங்ங்கே...).....!!!!!! தாதி சொல்லிச்சென்றாள்... குழந்தை அழுவது ஆரோக்கியமானது..... அம்மா அவள் அருகே எனை மலர்த்தி….. நெற்றியில் இதல்பதித்து அணைத்துக்கொள்ள…….. நான் உணர்ந்திருந்தேன்... என் நண்பனின் நெருக்கமும்…… உடல் சூடும்…. அன்பும்.... அரவணைப்பும் அப்படியே குறையாது இருந்ததை அவளிடம்.....!!!!!!!!!!!!!!!!

Thursday, February 11, 2010

நாங்கள் காதலித்தோம்...


நாங்கள் காதலித்தோம்...
பள்ளிக்கூடம்... அவள் வகுப்பறை...
கடந்து போவதென்றால்.. இருதயம்
மரதன் ஓடியவனாய் அடித்துக்கொள்ளும்...
எதிர்மாடி வகுப்பறை ஜன்னல்..
அவள் அறியாமல் பார்ப்பதில்
என்ன சுகம் இருந்ததென்று இன்று ஞாபகமில்லை...

நாங்கள் காதலித்தோம்...
இரண்டு சைக்கிளில் நாலுபேராய்
அவளை முந்திச்சென்று.. வித்தைகாட்டி...
ஒன்றாய்மோதி... தெருவில்விழ...
நண்பனின் காற்சட்டை சிப் போடமறந்ததை
அவளின் கேலிச்சிரிப்பால் கண்டு வெட்கிப்போனது
இப்போது நினைக்கையில் சங்கடம்மில்லை....

நாங்கள் காதலித்தோம்...
கோயில் திருவிழா...
அவளை கண்டதும் காதல்வர...
கடைக்கண்பார்வை கிட்டவேண்டி
செய்த பிரயத்தனமெல்லாம் வீணாய்ப்போக...
உற்சவத்தின் இறுதிநாளில்...
உச்ச முயற்சியாய்….
புகைப்படத்தில் அவளை வீழ்தும் சாகசம்
சறுக்கிக்கொண்டதும்...அவள்
சித்தப்பனிடம் நாங்கள் மாட்டிக்கொண்டதும்....
நினைவிலிருந்து முற்றாய் அழிக்கமுடியில்லை...


நாங்கள் காதலித்தோம்...
நண்பன் சொன்னான் காதலிப்பதாய்...
அடுத்தகணமே.. அவள்வீட்டு
தொலைபேசியை அலரச்செய்து
அவள் தாயுடன் அவனை பேசச்செய்து...
மீசை எட்டிப்பார்க்கும் வயதில்
விபரீதம் உணராது.... அவள்
வீடு சென்றோம்... பெண்கேட்க...
அங்கே... நடந்தவை ஒவ்வொன்றும்
இன்றுவரை ஞாபகப்பக்கங்களில் பதிந்து…
நாம் ஒன்றுகூடும் வேளைகளில்… வெடிச்சிரிப்புடன்
தவறாமல் மீட்டப்பட மறப்பதில்லை….

இப்படியாய்த்தான் நாங்களும் காதலித்தோம்...
இங்கே தவறுகள்... சரிகள் என்ற
எல்லைக்கோடுகள் இருப்பதில்லை...
விடலைப்பருவ காதலுக்கு அகராதியில்
இவ்விதமே பொருள் இருக்கும்...

இன்று... சந்தர்ப்பங்கள்... சூல்நிலைகள்...
எங்களிடையே தேச எல்லைகளை கீறிவிட
இந்த சின்ன.. சின்ன.. சேட்டைகளால்
நாங்கள் அவ்வப்போது தோளில் தட்டி
சிரித்து… சிலிர்த்துக்கொள்கிறோம்....
அது உங்களுக்குத்தெரிவதில்லை...
எங்களிற்கு மட்டுமே தெரிகின்றது....